எனது தினமணி வாசிப்பு ஆரம்பம் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. 1968-இல் காவேரிபாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் மின் பரிசோதகர் பணியில் இருந்தபோது என்னுடன் பணிபுரியும் நண்பர் முருகேசன் தினமணி வாங்கி வருவார். நாளிதழை குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் படிப்பார். நான் அவர் எப்போது முடிப்பார் என ஆவலுடன் இருந்து, அவர் முடித்தவுடன் எடுத்து அரைமணி நேரத்தில் முடித்துக் கொடுத்துவிடுவேன்.
1968-இல் ஆரம்பித்த தினமணி வாசிப்பு என்பது நான் பணியில் இருந்து ஓய்வு பெறும் வரை நூல்கள்களிலேயே முடிந்தது. எங்கு எந்தப் பதவியில் இருந்தாலும் தினம் நூலகம் செல்வதும் தினமணி படிப்பதும் தவறியதில்லை. 2001-இல் ஓய்வு பெற்றபின் வீட்டிற்கே வரவழைத்து தினமணியை முதலில் படித்து முடித்த பின்தான் மற்ற வேலை.
எனது வாசிப்பு பழக்கம் அதிகமாகக் காரணம் தினமணியே. ஓய்வுக்குப் பின் பொறியாளரான நான் எழுத்தாளனாக மாறியதில் தினமணிக்கு பங்கு உண்டு. இதுவரை 18 நூல்கள் எழுதியுள்ளேன். எல்லாம் சுய முன்னேற்றம், வரலாறு சம்பந்தமான நூல்கள்.
எனக்கு சிந்தனைக் களஞ்சியமாகவும், ஆர்வமும் வலிமையும் கொடுப்பது தினமணியின் நடுப்பக்கம்.