கடந்த ஆண்டு எமது பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது. நீர் நிலைகள் நிரம்பி உள்ளன. எனவே நமது பகுதிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து உணவு தேடியும், சூழ்நிலை மாற்றத்திற்காகவும், இனப்பெருக்கம் செய்யவும் பறவைகள் வலசை வந்துள்ளன.கோடியக்கரை, தொண்டியக்காடு, முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் ,அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம், பேராவூரணி மற்றும் உதயமார்த்தாண்டபுரம் ,வடுவூர் போன்ற பறவைகள் சரணாலயங்களுக்கு நிறைய பறவைகள் வந்துள்ளன.
இந்தப் பறவைகள் மீண்டும் தங்கள் பகுதிக்கு எந்தவித சேதமில்லாமல் செல்ல வேண்டிய பொறுப்பு நம் அனைவரின் கையில் உள்ளது. கடந்த கஜா புயலின் போது ஏராளமான பறவைகள் அழிந்து விட்டன .இந்த பறவைகள் விவசாயத்திற்கு கேடு செய்யும் பூச்சிகளை அழித்து உணவு விளைச்சலுக்கு காரணமாக இருக்கின்றது . உணவுச் சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இயற்கை அழகு சேர்க்கின்றது .ஆனால், நமது பகுதிகளில் சில இடங்களில் துப்பாக்கிகள் கொண்டும், கண்ணி வைத்தும், வலைகள் வைத்தும் ,அலையாத்தி காடுகள் போன்ற பகுதிகளில் தடிகொண்டு அடித்தும் இந்த பறவைகள் உணவிற்காக அழிக்கப்படுகின்றன. உள்ளூர் வயல்வெளிகளில் ஏரிகளில் இறை தேடும் இப்பறவைகளை வேட்டையாடி இறைச்சிகளை வாகனங்கள் மூலம் வெளியூருக்கு கடத்துகிறார்கள்.
இன்று நாம் கடலோரங்களிலும் வயல்வெளிகளில் நிறைய பறவைகளைப் பார்க்கிறோம். அதற்குக் காரணம் வன உயிரின பாதுகாப்பு சட்டமும் அதை தீவிரமாக அமல்படுத்தும் வனத்துறை அதிகாரிகளும் வேட்டை தடுப்பு காவலர்களும் தான். வனத்துறைக்கு நாம் அவசியம் நன்றி சொல்ல வேண்டும்.
வளர்க்கும் பறவைகளை நாம் உணவுக்காக எடுத்துக்கொள்ளலாம் .ஆனால் வலசை வரும் பறவைகளை அழிப்பது இயற்கைக்கு கேடு விளைவிக்கும். விவசாயம் அழியும். உணவு உற்பத்தி பாதிக்கப்படும் எனவே நமது பகுதிக்கு வரும் பறவைகளை பாதுகாப்பாக மீண்டும் சொந்த இடத்திற்கு அனுப்ப வேட்டைகளை தவிர்க்கவேண்டும்.
-வ. விவேகானந்தம் , அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம், தஞ்சாவூர்