சுஜாதாவின்  "பேனா 'குறித்த அனுபவம்!

சின்ன வயதில்- (ஐந்தாம் வகுப்பு முதல்,+2வரை) பள்ளிக்கு இங்க் பேனா தான். பால்-பாயிண்ட் பேனா எடுத்து வந்தால்,ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்வர்; அல்லது உடைத்துவிட்டு, வெளியே தூக்கிப் போடுவர்.
சுஜாதாவின்  "பேனா 'குறித்த அனுபவம்!

சின்ன வயதில்- (ஐந்தாம் வகுப்பு முதல்,+2வரை) பள்ளிக்கு இங்க் பேனா தான். பால்-பாயிண்ட் பேனா எடுத்து வந்தால்,ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்வர்; அல்லது உடைத்துவிட்டு, வெளியே தூக்கிப் போடுவர்.

நான் படித்த காலத்தில் முக்கால்வாசிப் பேனாக்களுக்கு "பிராண்ட்' எல்லாம் கிடையாது.ஐந்திலிருந்து ஏழு ரூபாய்க்கு நல்ல பேனா கிடைக்கும். ஒரு ரூபாய்க்கு இரண்டு கோல்ட் கலர் "நிப்பு' கிடைக்கும். கேம்லின்(Camlin) பேனா ஒன்பது ரூபாய் என்று நினைக்கிறேன், அட்டைப்பெட்டியில்-வரிசையாக பிளாஸ்டிக் கவர் போட்டு வைத்திருப்பார்கள். பேனா நடுவில் - கண்ணாடி ஜன்னல் இருக்கும்.அதில்-இங்க்கின் அளவு தெரியும். மேஸ்திரி வைத்திருக்கும் "மட்டப்பலகை' போல் அதில் இருக்கும் ஒரு நீர்க்குமிழியைப் பார்ப்பதே சிலசமயம் எனக்குப் பொழுதுபோக்கு.

கடைகளில் தடியாகக் கட்டைப்பேனா கிடைக்கும். ஒரு விதமான புகை வாசனை அடிக்கும். ரொம்ப நேரம் எழுதினால் கட்டைவிரல் ஜாயிண்ட வலிக்கும். எங்கள் கிளாசில் - சேட்டுவீட்டுப் பசங்கள்தான் ஹீரோ பேனா உபயோகப்படுத்துவார்கள். பேனாவின் மூக்கில்- அம்புக்குறி இருக்கும். இங்க்கை பாட்டிலில் உறிஞ்சி எடுக்கவேண்டும். எவ்வளவு உறிஞ்சி எடுத்தாலும், முழுவதும் நிரம்பாதது போல்-உணர்வு இருந்துகொண்டே இருக்கும். இதற்குப் பயந்து கொண்டு, பரீட்சைக்கு எடுத்துச் செல்ல மாட்டோம்.
பேனாவிற்கு இங்க் போடுவதற்கு கண்மருந்து போடுவதுபோல-ஒரு ஃபில்லர் தேவை. இங்க் ஃபில்லர். கண்ணாடி இங்க் ஃபில்லர் பிளாஸ்டிக் காக மாறி, இப்பொழுது துப்பாக்கிக்கு குண்டு போடுவது போல், "காட்ரிஜ்' எல்லாம் வந்து விட்டது. ரொம்ப அனுபவம் உள்ளவர்கள், பாட்டிலிலிருந்து-அப்படியே நிரப்புவார்கள். கை ஆடாமல் கவனமாகப் போட வேண்டும்.

படிக்கும் காலத்தில் கருப்புநிற இங்க்தான் எப்போதும் உபயோகிப்பேன்."பிரில்' இங்க்தான்-அப்பொழுது பிரபலம். செல்பார்க் கருப்பு - நீலம் கலந்து "புளு-பிளாக்' என்று ஒரு கலர் வித்தியாசமாக இருக்கும்.

அதேபோல்- "டர்காய்ஸ் புளு'(Turquoise Blue) எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதில்எழுதினால் மார்க் வராது என்று, பரீட்சைக்கு உபயோகப்படுத்தமாட்டேன். இங்க் கலருக்கு எல்லாம் நல்லபேர் இருக்கும். ராயல்புளூ, பர்மனெண்ட் பிளாக், லாரல் ரோஸ், டர்காய்ஸ் புளூ இப்படி.. ஒத்தக்கடையில் கேம்லின் இங்க் கிடைக்கும், பிரில்லை விட இது டார்க்காக இருக்கும். பேனாவை மூடாமல் விட்டால்,பிசுபிசுக்காகத் தட்டிப்போய்-பேனாவை சர்வீஸ் செய்ய வேண்டும்.

ஒருபிராண்ட்இங்க்கை உபயோகப்படுத்துபவர்கள், மற்ற பிராண்ட் இங்க்கை உபயோகப்படுத்த மாட்டார்கள்.

புதுப் பேனா வாங்கியவுடன் கழுத்துப்பட்டை பகுதியில் உள்ள மரையில் விளக்கெண்ணெய் வாசனை வரும். இங்க் போட்டவுடன் சரியாக எழுதாது. கொஞ்சம் மக்கர் பண்ணும். சரியான அளவில் தோய்த்து சரியான கோணத்தில் எழுதவேண்டும். இங்க்கை உதறி, நிப்பைத் தடவிக் கொடுத்து,தாஜா செய்ய வேண்டும். நம்ம வழிக்கு வருவதற்கு ஒரு வாரம் ஆகும். பிறகு அது சமத்தாக நாம் சொல்லுவதை எல்லாம் கேட்கும். ரொம்ப நாள் பழகிய பேனாவாக இருந்தால், அதை யாராவது கேட்டால் கொடுக்க மனம் வராது. மற்றவர் உபயோகப்படுத்தினால், அழுத்தி எழுதி, "நிப்பு' கோணலாகி எழுத்து பட்டை அடிக்குமோ ? என்று மனசு படபடக்கும்.

கொஞ்சநாள் எழுதிய பின்- "நிப்பு'க்கு அடியில்- ஒருவித பிசுபிசுப்பு வந்துவிடும். ஞாயிற்றுக்கிழமை நிச்சயம் பேனாவை சர்விஸ் செய்துவிடுவேன்.

பேனாவை சுத்தம் செய்வது என்பது ஒரு கலை. மிதமான வெந்நீரில் அதை ஊற வைத்து, அதில் படிந்திருக்கும் இங்க்கை எல்லாம் சுத்தமாக எடுத்து விட்டு, கிழிந்த வேஷ்டித் துணியால் அதைத் துடைக்க வேண்டும். காய்ந்த பின் இங்க்கை நிரப்பி வழிக்குக் கொண்டுவர வேண்டும்.

கையில் ரத்தம் வந்தால், உடனே-வாயில் வைப்பதைப்போல், விரலில் இங்க் வழிந்தால், தலையில் தேய்த்துக்கொள்வோம். தலைமயிர் இன்னும் கருப்பாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். எவ்வளவு நல்ல பேனாவாக இருந்தாலும், கட்டை விரல் ஓரத்திலும், சட்டை ஜோபி யிலும் கறைபடியாமல் இருக்காது. சில சமயம் கழுத்துப்பட்டை பகுதி மரையில், நூல் சுற்றி எழுதுவோம். மரை திறக்க முடியாமல் போனால் பற்களால் கடித்துத் திறப்போம் (பேனாவின் கழுத்தில் தழும்பு தெரியும்) வாயெல்லாம் நீலக்கலரில் - கிருஷ்ணர் வேஷத்தில் - "என்.டி.ஆர்' போல காட்சியளித்திருக்கிறோம்.

இங்க் பேனாவில் எழுதினால் கையெழுத்து நன்றாக வரும் என்று நம்பிக்கை. இதைத்தவிர-பள்ளிக்கூடத்தில்- நம்மை விட குண்டாகவுள்ள ஒருவனை அடிக்க முடியவில்லை என்றால், வீட்டுக்குப் போகும் போது புறமுதுகில் குத்துவது போல-அவன் சட்டைக்குப் பின்புறத்தில் இங்க் தெளித்து பழிக்குப் பழி தீர்த்துக்கொள்வோம்.பள்ளி கோடை விடுமுறைவிட்ட அன்று எல்லோரும் எல்லோருக்கும் இங்க் தெளித்து விளையாடுவோம். இன்று-இங்க்பேனா-ஒரு விலையுயர்ந்த நினைவுப்பரிசாகவும்,"ஷோ கேசி'ல் அலங்காரப் பொருளாகவும் மாறிவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com