மதுரையில் வீட்டருகிலிருந்த பாரதி வாசக சாலையில் மற்ற தினசரிகளுடன் சேர்த்தே தினமணியையும் படித்து வந்தேன்.
சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் தெருவில் வசித்து வந்த ஜகன்னாதாச் சாரியார் "நேசன்' என்ற மாத இதழை நடத்தி வந்தார். அவர்தான் என்னை சென்னைக்கு அழைத்து வந்தார்.
1958-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 1963 நவம்பர் வரை என் சென்னை வாசத்தில் ஓட்டல் சர்வர், புத்தகக்கடை, ஸ்வீட் ஸ்டால் என பல தொழில்களைச் செய்தேன். 1958-ஆம் ஆண்டு என் வயது 22. 1960-ஆம் ஆண்டு சென்னை மவுண்ட் ரோட்டில் எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டிலிருந்து தினமணி வெளிவந்து கொண்டிருந்தது.
தினமணி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைச் சில நாள்கள் நடத்தினர். ஒரு பிரபலமான அரசியல்வாதியின் ஒத்துழைப்போடு அத் தொழிலாளர்களில் சிலர் சேர்ந்து "நவமணி' நாளிழைத் தொடங்கினர். ஆனால் சில மாதங்களிலேயே அது மூடுவிழா கண்டது. அப்போதெல்லாம் எனது அபிமானப் பத்திரிகை தினமணி தான். வாலாஜா ரோட்டில் வசித்த வந்த கா.அப்பாத்துரையார், க.நா.சுப்ரமணியம் மந்தைவெளியில் வசித்த வந்த கவிஞர் சுரதா ஆகியோரை சந்தித்து உரையாடி விளக்கங்கள் கேட்பேன். சுரதாவின் நட்பால் கவிதைகள் எழுதினேன். பத்திரிகைகளில் நிறைய பிரசுமாகியுள்ளன. தினமணியின் நடுப்பக்கக் கட்டுரையின் ஈர்ப்பால் ஆய்வுக்கட்டுரைகள் எழுதினேன். அவை தினமணியில் பிரசுரமாகியுள்ளன.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை எனக்கு அகவை முதிர்ந்த தமிழறிஞர் பட்டயமளித்து உதவித்தொகையும் வழங்கிவருகிறது. நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதி நாடகங்களில் நடித்துள்ளேன். தற்போது எனக்கு வயது 81 ஆகிறது. எனினும் சைக்கிளில் தான் சென்று என் பணிகளைச் செய்து வருகிறேன்.
1964-ஆம் ஆண்டு முதல் இன்று வரை மதுரையில் வாசம். தொடர்ந்து தினமணியை வாசித்து வருகிறேன். தினமணியின் தலையங்கமும் நடுப்பக்கக்கட்டுரைகளும் வரலாற்றின் ஆவணங்களைப் போல் உள்ளதால் ஆயிரக்கணக்கான நடுப்பக்கக் கட்டுரைகள் என் சேமிப்பில் இப்போதும் உள்ளன.
கட்டுரையாளர்: அகவை முதிர்ந்த தமிழறிஞர்,
மதுரை