முதல்வருக்கு சேரன் கோரிக்கை. கரோனா பாதிப்புகளாலும், பொது முடக்கத்தாலும் மக்கள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்.
வேலையின்றி, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூட பண வசதி இன்றி தவித்துவரும் மக்களை மின்கட்டணம் மேலும் அச்சுறுத்துகிறது.
இந்த நிலையில் வழக்கத்தை விடவும் மின்கட்டணம் இரண்டு மூன்று மடங்கு அதிகரித்திருப்பது குறித்து இயக்குநர் சேரன் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சுட்டுரை கணக்கைக் குறிப்பிட்டு இயக்குநர் சேரன் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், "தமிழகம் முழுவதும் மின்வாரியத்துறையின் செயல்பாடுகளில் ஒரு தெளிவின்மை தென்படுகிறது. ஒவ்வொரு மாதத்திற்கான மின்கட்டணம் இதுவரை மாதாமாதம் கட்டிய தொகையிலிருந்து இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது.
இதுபோன்ற காலகட்டங்களில் மக்களுக்கு சலுகையோடு செயல்பட வேண்டிய நிர்வாகம் இப்படி அதிகப்படியாக வசூலிக்க நினைப்பது கேள்வியை எழுப்புகிறது. இதை எங்கே, எப்படிக் கேட்பது என்று தெரியாத அப்பாவி மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள். அந்த துறை சார்ந்த மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கவனிப்பார்களாக. வீட்டுக்கு வாடகையே கட்ட முடியாதவர்கள் எங்கிருந்து மின்சாரக் கட்டணம் இரண்டு மூன்று மடங்காக கட்டமுடியும்? இது போன்ற நேரங்களில் தளர்வு அளிக்கவேண்டும் அரசு' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.