இணையத்தில் பரவிய பேருந்து
கடந்த சில நாள்களாக, ஒரு பேருந்தின் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி கொண்டிருந்தது. லண்டனிலிருந்து கொல்கத்தா செல்லும் பேருந்தின் புகைப்படம் அது. என்னது... லண்டனிலிருந்து கொல்கத்தாவுக்கு பேருந்து பயணமா என்று ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது அல்லவா? ஆனால், விஷயம் உண்மைதான்.
லண்டனிலிருந்து கொல்கத்தாவுக்கு ஒரு பேருந்து இயக்கப்பட்டுள்ளது. பேருந்தின் பெயர் ஆல்பர்ட் டிராவல் பஸ்.
கடந்த 1957- ஆம் ஆண்டு ஏப்ரல் 15- ஆம் தேதி லண்டன் விக்டோரியா பேருந்து நிலையத்திலிருந்து கொல்கத்தாவுக்குத் தன் சேவையை இந்தப் பேருந்து தொடங்கியது.
லண்டனிலிருந்து புறப்படும் பேருந்து பெல்ஜியம், ஜெர்மனி, ஆஸ்திரியா, யூகோஸ்லேவியா, பல்கேரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது.
பிறகு, டெல்லி, ஆக்ரா, அலகாபாத், பனராஸ் வழியாக கொல்கத்தாவை சென்றடைந்துள்ளது.
லண்டனுக்கும் கொல்கத்தாவுக்கும் மொத்தம் 7,962 கி.மீ தூரம் இந்தப் பேருந்து பயணித்துள்ளது. இந்தப் பேருந்து 48 நாள்களுக்கு மேலாகப் பயணித்து லண்டனிலிருந்து கொல்கத்தா வந்துள்ளது.
பயணத்தின் போது வியன்னா, இஸ்தான்புல், காபூல், சால்ஸ்பர்க், டெக்ரான் , புதுடெல்லி நகரங்களில் பயணிகள் ஷாப்பிங் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லண்டனிலிருந்து கொல்கத்தா வர கட்டணம் 85 பவுண்டுகள். இந்திய மதிப்பில் ரூ. 8,109 வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், உணவு, தங்குமிடம், பேருந்து கட்டணம் எல்லாம் அடக்கம். பேருந்தில் ரேடியோ மின் விசிறி உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
ஆல்பர்ட் பேருந்து நிறுவனம் இதே போல 20 பேருந்துகளை இயக்கி வந்ததாக தகவல் உள்ளது. 1970-ஆம் ஆண்டு வரை இந்தப் பேருந்து இயக்கப்பட்டுள்ளது. இப்போதும், லண்டனுக்குச் செல்ல பேருந்து வசதி இருந்தால், விசா நடைமுறைகள் இல்லையென்றால், எவ்வளவு சந்தோஷமான பயணமாக இந்தப் பயணம் அமையும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.