இத்தாலியில் உள்ள சலேமி பகுதியில் வெறும் ஒரு யூரோ ((தற்போதைய இந்திய மதிப்பில் ரூ.87) விலையில் வீடுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்தவீடு என்பது அனைவரின் கனவு என்பதை மறுக்கமுடியாது. இதற்காக மக்கள் தங்கள் வாழ்நாள் வருமானத்தில் பெரும்பகுதியை வீடு வாங்க முதலீடு செய்கின்றனர். சிலர் கடன் பெற்று வீடு வாங்கி, அதனை வாழ்நாள் முழுவதும் அடைக்கிறார்கள். இப்படியாக ஒவ்வொருவரும் தங்களுக்கென சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என கனவுடன் ஓடிக்கொண்டிருக்கின்றனர். இயல்பு இப்படியிருக்க, இத்தாலியில் ஒரு வீடு வெறும் ரூ.87க்கு விலைக்கு விற்கப்படுகிறது என்றால் நம்பமுடிகிறதா. ஆச்சரியமான விஷயம் என்னவெனில் இவ்வளவு குறைந்த விலைக்கு கூட யாரும் வாழ விரும்பவில்லை என்பது தான்.
இத்தாலி நாட்டின் தென்மேற்கில் உள்ள சிசிலி நகரத்தின் சலேமி பகுதியில் தான் இந்த குறைந்த விலை வீடு ஏலம் விடப்படுகிறது. 1968-ஆம் ஆண்டு பெலிஸ் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு பிறகு, சலேமி நகரத்தின் மக்கள் தொகை கணிசமாக குறைந்துள்ளது. இதனையடுத்து முன்பு போலவே நகரங்களில் மீண்டும் மக்கள் அதிக அளவில் இங்கு குடியேற வேண்டும் என்ற முயற்சியில், குறைந்த செலவில் வீடுகள் வழங்கப்படுகின்றன என அந்த நகரத்தின் மேயர் தெரிவித்தார்.