"தெய்வமகன்' படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரம் , ஒரு தொண்டு அமைப்புக்காக "கட்டபொம்மன்' நாடகத்தை நடத்தித் தர சிவாஜி கணேசன் ஒப்புக் கொண்டிருந்தார்.
நானும் அவருடன் நாடகத்துக்குச் சென்றேன். காரில் போகும்போது டயலாக் பேப்பரை என்னிடம் தந்தார், "" நான் சரியா பேசறேனான்னு செக் பண்ணு'' என்று சொல்லிவிட்டு "கட்டபொம்மன்' வசனத்தைப் பேசத் தொடங்கினார்.
அன்று உணர்ச்சி வசப்பட்டு நடித்த சிவாஜி நாடகம் முடிந்ததும் ஒரு துண்டை எடுத்து வாயை மூடிக் கொண்டு யாரிடமும் சொல்லாமல் காரில் ஏறி விட்டார்.
பின்னாலேயே சென்ற நான், ""உங்களைப் பாராட்டுவதற்காக எல்லாரும் காத்திருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது சொல்லாமல் கொள்ளாமல் போகலாமா'' என்று கேட்டேன்.
உடனே வாயிலிருந்த துண்டை எடுத்துக் காட்டினார். துண்டு முழுவதும் ரத்தம். உணர்ச்சி வசப்பட்டு நடித்ததால் வாயில் ரத்தம் வந்துவிட்டது.
""இதைப் பார்த்தால் அவர்கள் பயப்படுவார்கள். அதனால்தான் காருக்குள் வந்து விட்டேன்'' என்றார் இத்தனைக்குப் பிறகும் மறுநாள் "தெய்வமகன்' படப்பிடிப்புக்கு வந்து விட்டார். அதுதான் சிவாஜியின் தொழில் பக்தி.
சொன்னவர்: இயக்குநர் ஏ.சி. திருலோக்சந்தர்.
"வியப்பூட்டும் செய்திகள்' என்ற நூலிலிருந்து-