கரோனா தொற்று எதிரொலியாக அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியமானதால், குளத்தூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் பனை தொழில் செய்யும் தம்பதியினர் பனை ஓலையில் முகக் கவசம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
குளத்தூர் அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த குணசேகரன்-முருகலட்சுமி தம்பதி. இவர்கள் பனைத் தொழிலில்ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பனை ஓலையை மடக்கி நூலில் கட்டி முகக் கவசம் தயாரித்து அணிந்து கொண்டு பனைத் தொழிலுக்கு குணசேகரன் முருகலட்சுமி தம்பதி சென்றுள்ளனர்.
இதனை வியப்பாக பார்த்த கிராம மக்களும், பதநீர், கருப்புக்கட்டி வாங்க வரும் பிற பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளும் பனை ஓலை முகக் கவசம் வாங்கி அணியத் தொடங்கினர். பனை ஓலை முகக் கவசம் பரவலாக மக்களிடையே பேசப்பட்டதை அடுத்து தற்போது, பனை ஓலை முகக் கவசம் விற்பனை சூடு பிடித்துள்ளது.
இதுகுறித்து தொழிலாளி குணசேகரன் கேட்ட போது சொன்னார்: கரோனா நோய் பரவுவதால் அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற நிலை உருவானதால், முகக் கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. விலையும் அதிகரித்தது.
ஆகவே, விலைக்கு முகக் கவசம் வாங்குவதை தவிர்த்து பனை ஓலையில் முகக் கவசமாக அணியத் தொடங்கினோம்.
இது கிராம மக்களிடமும், இயற்கை ஆர்வலர்களிடமும் வரவேற்பை பெற்றது. அரசு அதிகாரிகளும் பனை ஓலை முகக் கவசம் ரூ. 10 க்கு வாங்கிச் செல்கின்றனர். விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் 100 பனை ஓலை முகக் கவசம் வாங்கிச் சென்றனர். தினமும் 100 பனை ஓலை முகக்கவசம் தேவை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இயற்கையாக தயாரிப்பதாலும், மணமாக இருப்பதாலும் பனை ஓலை முகக் கவசத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது'' என்றார் அவர்.
சுப்பிரமணியுரம் மட்டுமின்றி சுற்று வட்டாரக் கிராமங்களில் உள்ள பனைத் தொழிலாளர்கள், பொதுமக்கள் பனை ஓலை முகக் கவசத்தை ஆர்வமுடன் வாங்கி அணிந்து வருகின்றனர்.