நான் ஒரு யானைப்பாகன்!

""ஒரு அடர்ந்த வனம் கம்பீரமாக நிற்க மரங்கள் காரணம்தான். ஆனால், அது மட்டுமே என்றால் இல்லை. காட்டில் ஒரு யானை நாளொன்றுக்கு 50-இல் இருந்து 60 கிலோமிட்டர் தூரம் நடக்கும்.
நான் ஒரு யானைப்பாகன்!

""ஒரு அடர்ந்த வனம் கம்பீரமாக நிற்க மரங்கள் காரணம்தான். ஆனால், அது மட்டுமே என்றால் இல்லை. காட்டில் ஒரு யானை நாளொன்றுக்கு 50-இல் இருந்து 60 கிலோமிட்டர் தூரம் நடக்கும். அப்படி இடம்பெயரும்போது ஆங்காங்கே விழும் அதன் சாணத்திலிருந்து அதே 50 -இல் இருந்து 60 விதைகள் விழும். அந்த விதைகள் மழைக்காலங்களில் செடிகளாகி பின்னர் மரமாகும். ஒரு வனத்துக்குப் பின் இப்படி ஒரு சங்கிலித் தொடர் வரலாறும் உண்டு. ஆனால், நாம் பல வகைகளில் யானைகளின் அழிவுக்கு காரணமாக இருக்கிறோம் "ஆதங்கத்தோடு பேசத் தொடங்குகிறார் இயக்குநர் பிரபுசாலமன்.


"கும்கி' பாணியில் மீண்டும் காடும் காடு சார்ந்த களத்திலும் "காடன்' படத்தை இயக்கி முடித்துள்ளார். 

"காடன்' வழியே என்ன சொல்ல வருகிறீர்கள்...

"தொடரி' படத்துக்கு பிறகு 2 வருஷ உழைப்பைக்கொட்டி எடுத்துக்கொண்டிருக்கும் படம் இது. "கும்கி' படம் எடுக்கத் தொடங்கிய காலகட்டத்திலேயே ஆய்வு செய்யத் தொடங்கிய களம். இப்போது சாத்தியமாகியுள்ளது. அஸ்ஸாம் பகுதியில் காசிரங்கா என்ற வனப்பகுதியில் கிட்டத்தட்ட 450 ஹெக்டேர் சுற்றி வளைத்து "ரைனோ பார்க்' என்ற டவுன்சிப் உருவாக்கியபோது காட்டின் நடுவே 6 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு தடுப்புச் சுவர் எழுப்பபடுகிறது.

அந்த தடுப்பு சுவரால் தன் தாத்தன், பாட்டன் காலகட்டத்தில் இருந்து மியான்மர், பர்மா, மேகாலயா வழியாக யானைகள் அஸ்ஸாமுக்கு பயணித்து வந்த போக்குவரத்து தடம் பாதிக்கப்படுகிறது. இதனால் அவ்வழியே சென்ற யானைகள் திக்குமுக்காடி நிற்கின்றன. அதில் சில யானைகள் சுவரை உடைக்க முற்பட்டு இறந்தும் போயின. இப்படி அநாதைகளாக்கப்பட்ட யானைகளை ஒரு தனிமனிதன் போராடி அதன் வழித்தடங்களை எப்படி மீட்டுக்கொடுக்கிறான் என்பதுதான் கதை.

அந்த தனிமனிதன் தான் ராணாவா?

"பாரஸ்ட் ஆப் தி மேன்' என்று அழைக்கப்படும் ஜாதவ் பியான்ங் ஒரு தனிமனிதனாக பிரம்மபுத்ரா கரையோரங்களில் 1350 ஏக்கர் பரப்பளவில் காடுகளை உருவாக்கிய மனிதன். கடந்த 2015-ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வாங்கியவரும்கூட. இப்படி காடுகளின் மீது அக்கரைகொண்ட மனிதன், அநாதைகளாக்கப்பட்ட யானைகள் சென்று வந்த இடத்தில் கட்டப்பட்ட தடுப்புச்சுவரை உடைத்து எப்படி அதன் வழித்தடங்களை உருவாக்கி கொடுக்கிறார் என்று திரைக்கதை அமைத்தால் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன். இந்த 2 உண்மை சம்பவங்களையும் இணைத்து திரைக்கதை எழுதப்பட்ட கதைதான் இது. ஜாதவ் பியான்ங் மனிதரின் தோற்றத்தின் பாதிப்பில் உருவான அந்த காடன் தான் ராணா.

அப்படியென்றால் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு என்ன பங்கு...

காட்டுக்குள் யானைகள் வழித்தடத்தை மறித்து சுவர் எழுப்பும்போது அங்கே மற்ற மற்ற யானைகள் தொந்தரவு இருக்கக்கூடாது என கும்கி யானைப் பாகனாக வருபவர்தான் விஷ்ணு விஷால். படத்தின் தொடக்கத்தில் நெகடிவ் கதாபாத்திரம் மாதிரி இருந்தாலும் போகப்போக வனத்தின் முக்கியத்துவம், யானைகளின் பாதுகாப்பு என புரிந்துகொண்டு ஒரு கட்டத்தில் அந்த சுவரை இடிக்க தானும் போராட்டத்தில் இறங்கும் ஒரு மனிதனாக மாறுவார். இந்தக்கதைக்குள் காதல் உள்ளிட்ட மற்ற மசாலா விஷயங்களுக்கு வேலை கிடையாது. மேலும், பத்திரிகையாளர் அருந்ததி என்ற கதாபாத்திரம் முக்கிய அங்கம் வகிக்கும். அந்த பாத்திரத்தை ஸ்ரேயா என்ற பெண் ஏற்றிருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக விபத்து என்ற போர்வையில் யானைகள் வாழ்விடத் தாக்குதல் அதிகரித்து வருகிறதே...

ஒரு யானையின் மதிப்பு ரூ.3.5 கோடி. அது இருந்தாலும் பொன். இறந்தாலும் பொன். அதனால்தான் விபத்து, விபரீதம் என பல போர்வைகளில் யானைகள் வேட்டையாடப்பட்டு வருகின்றன.

யானைகள், காடு என கடும் சிரத்தைக்கொண்ட பின்னணியில் மூன்று மொழிகளில் படம் எடுப்பது எப்படி உள்ளது....

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு படம் எடுப்பதும் ஒருவித சவாலான விஷயம்தான். தமிழில் கதை உதகையின் பின்னணியில் நடக்கும், தெலுங்கில் விசாகப்பட்டினம், ஒரிசா பகுதியில் நடப்பது போல படமாக்கியுள்ளேன். ஹிந்தியில் சட்டீஸ்கர் பகுதியில் நடக்கும். தெலுங்கு மொழியில் நடிக்கும்போது ராணா ஒரே டேக்கில் நடித்துக்கொடுத்துவிடுவார். அதுவே தமிழ், ஹிந்தி என செல்லும்போது தன்னை அறியாமல் தாய்மொழி பேசிவிடுவார். அந்தமாதிரியான காட்சிகள் எடுக்கும்போது அவருக்கு பின்னால் 30 யானைகள் நிற்கும். அவற்றையெல்லாம் திரும்பத் திரும்ப கொண்டு வந்து நிறுத்தி படமாக்கிய அனுபவம் திரில்லாகவே இருந்தது.

ஏன் தாய்லாந்து படப்பிடிப்பு...

நம் ஊரில் ஆடுகள் வளர்ப்பதைப்போல தாய்லாந்தில் யானைகளை பட்டியில் அடைத்து வளர்க்க அரசாங்கமே ஆதரவு அளிக்கிறது. அதுவும் ஒன்றிரண்டு யானைகள் அல்ல.. 10-க்கும் மேலான யானைகள்கூட நீங்கள் வளர்க்கலாம். அந்த வளர்ப்பு முறை படமாக்க உபயோகமாக இருந்தது. அதனால் படத்தின் 40 நாட்கள் படப்பிடிப்பு அங்கே நடந்தது.

தொடர்ந்து யானைகள் பின்னணியான களம் ஏன்?

என்ன செய்வது. என் நேரம். அப்படி அமைகிறது. யானைகளோடே வாழ்ந்து பயணித்து நானும் இப்போது ஒரு யானைப்பாகனாகவே ஆகிவிட்டேன். உன்னி என்ற கேரள யானை இப்போது நான் என்ன சொன்னாலும் கேட்கும். "கும்கி' படத்திலிருந்தே என்னோடு அந்த யானை பயணிக்கிறது. இதைவிட மகிழ்ச்சி என்ன இருக்கப்போகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com