மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் "சைக்கோ'. உதயநிதி, நித்யாமேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. இதில் கொலையாளி சைக்கோவுக்கு உதவும் ஹேக்கர் வேடத்தில் நடித்திருப்பவர் கே.ஜி.செந்தில்குமார். ஓரிரு காட்சிகளில் வந்தாலும், ரசிகர்களின் பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
ஏற்கெனவே "விழி மூடி யோசித்தால்' படத்தை இயக்கி நடித்த இவர், தனது பயணம் குறித்து பேசும் போது... ""நடிப்பை விட படம் இயக்குவதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம். நிறைய நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், சைக்கோ மாதிரியான தேர்ந்த கதைகளிலேயே நடிக்க விரும்புகிறேன். "துருவன்' என்ற பெயரில் த்ரில்லர் கதை ஒன்றை இயக்க இருக்கிறேன். இதற்காக சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி இருவரில் ஒருவரை சந்தித்துக் கதை சொல்ல இருக்கிறேன். அது போல் சூர்யா, ஜோதிகா, கார்த்தி மூவரையும் ஒரே கதையில் இணைக்கும் முயற்சியில் இருக்கிறேன். அதற்காகக் கதை சொல்லி இருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் இயக்குவேன். இந்தப் படம் தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக இருக்கும். அதற்கான முயற்சிகளில் மட்டுமே இப்போது இருக்கிறேன்'' என்றார் கே.ஜி.செந்தில்குமார்.