தினமணியின் வயது- 85; என் வயதும் 85. கடந்த 70 ஆண்டுகளாக தினமணியைத் தொடர்ந்து வாசித்து வருபவன். "நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்' என்று முழக்கத்துடன் வெளிவரும் தேசிய நாளிதழ் தினமணி. எர்ணாகுளம் டி.வி.எஸ். மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றுகையில், அதிபர் ராம்நாத் கோயங்கா மற்றும், சென்னை தினமணி முதன்மை ஆசிரியர் ஏ.என்.சிவராமனையும் சந்தித்து உரையாடியதும், உடன் பிரயாணம் செய்ததும் மறக்க முடியாத அனுபவங்கள்.
புதுக்கோட்டையில் சிலகாலம் பகுதிநேர செய்தியாளராக (1962-1966) பணியாற்றியபோது, எனக்கு மதுரை தினமணியுடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. மதுரை ஜெனரல் மானேஜர் டி.கே.தியாகராஜன், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் என்.கீர்த்திவாசன் ("லேடீஸ் ஸ்பெஷல்' கிரிஜா ராகவனின் சொந்த தாத்தா), தினமணி ஆசிரியர் வெ.சந்தானம் மூவரும் என்னிடம் பேரன்பு கொண்டவர்கள்.
தலை சிறந்த நிர்வாகியான ஜெனரல் மானேஜர் டி.கே.தியாகராஜன், தரமான உயர்பதிப்பாய் வெளிவரக் காரணமான "இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆசிரியர் என்.கீர்த்திவாசன் கலைகளுக்கும், ஆன்மிகத்திற்கும் அதிக அளவில் சிறப்பிடம் கொடுத்த தினமணி ஆசிரியர் வெ.சந்தானம் ஆகிய மூவரும் என்றுமே மறக்க முடியாதவர்கள்.
"மணிக்கொடி' குழாமைச் சார்ந்தவர் - "அன்னாகரீனா'வை முதன் முதலில் மொழிபெயர்த்தவர் - சுதந்திரப் போராட்ட தியாகி எனப் பன்முகம் கொண்ட தினமணி ஆசிரியர் வெ.சந்தானம். சரியாக எழுதுவதும், விரைவாக செயல்படுத்துதலும் ஒரு பத்திரிகையாளருக்கு மிக முக்கியம் எனக் கூறி, குழந்தைகளுக்குச் சிறுகதைகள், பாடல்கள் எழுதிவந்த என்னைத் தட்டிக் கொடுத்து ஊக்குவித்தவர்.
ஓய்வு பெற்ற பல ஆண்டுகளுக்குப் பின் முதிய வயதில் கடைசி காலங்களில் அவர் எல்லீஸ் நகரில் வசித்து வந்தபோது, எனது வருகை அவருக்கு உவகை தரும். மகிழ்ச்சி பொங்க வரவேற்பார். இவையெல்லாம் மறக்க முடியாத நிகழ்வுகள். அதை நினைவுபடுத்திய "தினமணி'க்கு என் மனமார்ந்த நன்றி!
"குழந்தை இலக்கியச் செல்வர்'
புதுகை பி.வெங்கட்ராமன்