1961-1966 ஆம் ஆண்டுகளில் ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலங்கள். திருச்செந்தூரில் இந்து இளைஞர் ஆரம்பப்பள்ளி என்ற பெயர் கொண்ட பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் ராமசுந்தரம். பள்ளியின் இடைவேளையின் போது தினமும் அன்றைய முக்கிய தினசரி செய்திகளை மாணவர் ஒருவர் வாசிக்க ஏற்பாடு செய்திருப்பார்.
அப்போது பள்ளியில் வாங்கிய ஒரே நாளிதழ் தினமணி தான். முக்கிய தலைப்புச் செய்திகளை பள்ளியில் மாணவர்கள் நடுவில் வாசிக்கப்பட்ட அன்றைய தலைமுறையின் மனதில் நாட்டு நடப்புகளை பதிவு செய்ய தினமணி பயன்பட்டது. மாணவப் பருவத்தில் எனக்கு அறிமுகமான தினமணி 53 ஆண்டுகளாக நிரந்தரமான துணையாக இன்றும் திகழ்கிறது.
கல்லூரிக் காலங்களில் அன்றைய ஆசிரியர் ஏ.என்.சிவராமன் எழுதிய பொருளாதாரம் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளும், அறிவியல் தொடர்பான கட்டுரைகளும் ஒரு பாடநூல் போல் விளங்கியது. பொருளாதாரம் தொடர்பாக அவர் எழுதிய பணவீக்கம், அமெரிக்க-சோவியத் நாட்டின் பொருளாதாரப் பிரச்னைகள் தொடர்பான கட்டுரைகளும், பின்னர் அக்கட்டுரைகள் நூலாகப் பதிப்பிக்கப் பெற்று வெளிவந்த போது வழிகாட்டியாக அமைந்தது.
அவரைத் தொடர்ந்து ஆசிரியர் பொறுப்பில் இருந்தவர்கள் தினமணியின் இணைப்பாக வெளியிட்ட தினமணிச்சுடர், தமிழ்மணி, வணிகமணி போன்றவைகளும் வாசிப்பின் ஆர்வத்தைத் தூண்டிவிட்டன.
தற்போதைய ஆசிரியர் கி. வைத்தியநாதன் காலத்தில் அவ்வப்போது தினமணி வெளியிடும் சிறப்பு மலர்களாக தினமணி வைரவிழா மலர், அண்ணா நூற்றாண்டுமலர் போன்றவைகளும் சிறப்பாக நினைவில் நிற்கும் வண்ணம் வெளிவந்துள்ளன.
ஆண்டுதோறும் வரும் மாணவர் மலர், மருத்துவ மலர், தீபாவளி மலர், ரமலான் சிறப்பிதழ் போன்றவைகளும் வாசகர்களின் அறிவுக்கு உரமாய் அமைந்தன.
நடுநிலை பிறழாத தலையங்கமும், நடுப்பக்கக் கட்டுரைகளும், தினமணி வெளியிடும் சிறப்பு மலர்களும், நூற்றாண்டு பயணத்தில் வாசகர்களை அழைத்துக் கொண்டு செல்லும் வண்ணம் அமைகின்றன.
தற்போது நடத்தப்பட்டு வரும் சிறுகதைப் போட்டிகளும் சிறுகதை இலக்கிய உலகில் புதியவர்களையும் புதிய கதைகளையும் அறிமுகம் செய்யும் வகையில் உள்ளது.
-கணேசன், திருச்செந்தூர்