தமிழ் சினிமாவில் பல ஆண்டு கால அனுபவம் உள்ளவர் குகன் சக்ரவர்த்தியார். "ரட்சகன்' உள்ளிட்ட பல படங்களில் நடிகராக அறியப்பட்டவர், இப்போது "வங்காள விரிகுடா' படத்தின் மூலம் இயக்குநராக வருகிறார். அதோடு கதை, திரைக்கதை, நடிப்பு, ஒளிப்பதிவு, நடனம், சண்டை என சினிமாவின் 21 துறைகளிலும் பங்களிப்பை நிகழ்த்தியுளளார்.
படம் குறித்து பேசும் போது...." கதையின் ஒட்டு மொத்த ஈர்ப்பையும் கவருவதற்காகவே 21 துறைகளிலும் பணியாற்றியுள்ளேன். ஒருவரால் தான் வாழும் கடைசி நொடி வரை தர்மம் செய்ய முடியும், சொத்து சேர்க்க முடியும். ஆனால், இன்னொருவருக்குக் கல்வியறிவையும், வாழ்க்கையையும் கற்பித்துக்கொண்டே இருக்க முடியுமா என்றால் அது வெகு சிலரால் மட்டுமே முடியும்.
அப்படி ஒரு பெயர் இருக்குமென்றால் "அப்துல்கலாம்' என்ற பெயர் அதில் கட்டாயம் இருக்கும். கடைக்கோடி ஊரில் இருந்து முதல் குடிமகனாக மகுடம் சூடினார். அணு விஞ்ஞானி, அறிவியல் ஆசிரியர், குடியரசுத் தலைவர் எனப் பன்முகத் தன்மை கொண்ட அவரை அடுத்தடுத்த தலைமுறைகள் பின்பற்ற வேண்டும்.... இதுதான் இங்கே முக்கியக் கருத்தாக இருக்கும். அதே சமயத்தில் அண்மை காலத் தலைவர்களின் நெறிகளும், வாழ்க்கையும் இதில் உண்டு. கூடவே, சமகாலப் பிரச்னைகள் இன்றைக்கு நடக்கிற விஷயங்களும் இருக்கும்'' என்றார்.