ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் "மூக்குத்தி அம்மன்'. தீபாவளி பண்டிகை வெளியீடாக தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் ஒரு பகுதியாக ஆர்.ஜே.பாலாஜி சுட்டுரையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் ரஜினிகாந்த் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவர், ""நான் ரஜினியின் மிகப் பெரிய ரசிகன். சின்ன வயதில் நான் பள்ளியில் படிக்கும்போது என் தாத்தா "ரஜினி ஒரு நல்ல மனிதர்' என்று சொன்னார். அது என் மனதில் அப்படியே ஆழமாக பதிந்து விட்டது. ரஜினி ஒரு அற்புதமான மனிதர். ஒரு சூப்பர்மேன். "தளபதி' முதல் "தர்பார்' வரை அவரை பற்றி நிறைய நினைவுகள் எனக்குள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்னர் அவர் அரசியலுக்கு வருவது குறித்து பேட்டி கொடுத்திருந்தேன். அந்தப் பேட்டியை நான் பின்னர் பார்க்கும்போது கஷ்டமாக இருந்தது. நான் அப்படி பேசியிருக்கக் கூடாது என்றும் தோன்றும். அதற்காக நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவருக்கு அனைத்து சந்தோஷங்களும் அவர் நினைக்கும் எல்லா காரியமும் கைகூட வேண்டுமென நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்'' என்று ஆர்ஜே பாலாஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.