இந்திய அஞ்சல் துறையில் நாற்பது ஆண்டுகள் சேவை செய்து பணி ஓய்வு பெற்றவன். இப்பொழுது வயது 74.
உயர்நிலைப்பள்ளியில் என்னுடைய ஒன்பதாம் வகுப்பு தமிழாசிரியர், நாளும் தினமணியின் தலைப்புச் செய்திகளை பொது அரங்கில் கரும்பலகையில் அனைவரும் படித்திடும் வகையில் எழுதி வருமாறு பணித்ததின் விளைவாக எனக்கு இதழோடு தொடர்பு ஏற்பட்டது. சுடர், தமிழ்மணி கட்டுரைகள் என் அறிவுக்கு விருந்தாயின. மாத வெளியீடுகளை வாங்கி என் நூலகத்தில் சேர்த்தும் உள்ளேன்.
அதில் ஒன்று தான் 1970-இல் வெளியான நவீனன் எழுதிய "அண்ணாவின் கதை'.
-என்.பி.எஸ்.மணியன், மணவாளநகர்
கடந்த 42 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறேன். ஜாம்புவானோடை கிராமத்தில் வசித்து வருகிறேன். அங்கு தினமணி தான் வாங்குவார்கள். எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தினமணியையும் அதன் இணைப்புகளையும் படிப்பேன். தற்போது வரை படித்துக்கொண்டும இருக்கிறேன்.
பிரபல எழுத்தாளர்களின் தொடர்கள் பல தலைவர்கள், அறிஞர்கள், ஆன்மிகப் பெரியவர்கள் போன்றவர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள முடிந்தது. எடுத்துக்காட்டாக பம்மல் சம்பந்த முதலியார், ஆனந்தரங்கம்பிள்ளை, ஜே.சி.குமரப்பா என பல ஜாம்பவான்களின் வாழ்க்கை வரலாற்றை என்னுள் விதைத்தது தினமணி தான்.
-க.சுப்பிரமணியன், ஜாம்புவானோடை