கர்நாடகாவின் கடிகேயில், லாயிட் எட்வர்டுக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் தென்னை பயிரிட்டு வளர்க்கிறார். இத்துடன் டி.சி.எஸ். நிறுவனத்திலும் அவர் ஒரு சாப்ட்வேர் எஞ்ஜினீயர். இதனால் அவருக்குக் கூடுதலான சிந்தனை எழுந்தது.
பெங்களூரில் ஏராளமான டெக்னிக்கல் பார்க்குகள் உள்ளன. அவற்றினுள் இளநீர் கடைபோட்டால் நன்கு விற்பனையாகுமெனச் சிந்தித்தார்.
உடனே Econut coconut producer company என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். தென்னை பயிரிடும் விவசாயிகளைத் தொடர்பு கொண்டு, இளநீர் காய்களை சேகரித்து, அவற்றை பெங்களூர் எல்லையில் உள்ள கெங்கிரி பகுதிக்குக் கொண்டு வந்தார். அங்கு 30 ஏக்கர் நிலம் வாங்கி, அவற்றினுள் இளநீர் காய்களை இறக்கி பிறகு பெரிய டிரக்குகள் மூலம்.. பெங்களூரில் உள்ள 17 டெக்னிகல் பார்க்குகளிலும் அமைந்துள்ள கியோஸ்களுக்கு சப்ளை செய்கிறார்.
இங்கு இளநீர் வெட்டி கொடுக்க மெஷின் பொருத்தபட்டுள்ளது. கைபடாமல் கிடைப்பதால், வாங்கிச் சாப்பிட்டுச் செல்கின்றனர். பெரிய இளநீர் தேங்காய்கள். 35 - 40 ரூபாய் வரை விற்கின்றன. தொடர் சப்ளைக்காக 7000 விவசாயிகளுடன் நேரடி தொடர்பு வைத்துள்ளனர்.
இளநீர் மொத்தமாக, விவசாயியிடம் வாங்க வருபவர்கள், ஒரு காய்க்கு 8 ரூபாய் என தரும்போது, லாயிட் எட்வர்ட் அவர்களுக்கு 18 ரூபாய் வரை தருகிறார். பலன் காய் தேடி வருகிறது.
காலியாகும் இளநீர் மட்டைகள் சேகரிக்கப்பட்டு, பவுடராக்கப்பட்டு விவசாயிகளுக்கு உரமாகத் திரும்பத் தரப்படுகிறது.
எதைச் செய்தாவது முன்னேற துடிப்பவர்கள் இதனையும் பெரிய அளவில் முயற்சிக்கலாமே..