சூர்யாவின் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் "சூரரைப் போற்று'. படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்போது வரை ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற தமிழ் படம் இது. இதையடுத்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் "நவரசா' எனும் ஆந்தாலஜி படத்தில் நடித்த சூர்யா, தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இது சூர்யாவின் 40-ஆவது படமாக உருவாகவுள்ளது.
இந்தப் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், "சூர்யா 40' படத்தில் நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர்கள் இருவரும் ஏற்கெனவே பாலா இயக்கத்தில் வெளியான "நந்தா' படத்தில் நடித்திருந்தனர். கடந்த 2001-ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூர்யாவும் ராஜ்கிரணும் இணைந்து நடிக்க உள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.