பனையேறும் தொழிலாளிகளின் வாழ்வையும், வலியையும் பறைசாற்றும் வகையில் உருவாகி வரும் படம் "நெடுமி'.
புதுச்சேரி எம்.வேல்முருகன் தயாரிக்கும் இப்படத்தை அரிஷ்வர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர்களான நந்தா லக்ஷ்மண் மற்றும் ஏ.ஆர்.ராஜேஷ் எழுதி இயக்குகின்றனர். பனையேறும் தொழிலாளிகளின் வாழ்வியலைச் சுற்றி இக்கதை பின்னப்பட்டுள்ளது. பனையேறிகளின் வாழ்க்கை அத்தனை எளிதானது அல்ல. ஓங்கி வளர்ந்த பனையில் உயிரைப் பணையம் வைத்து ஏறி இறக்கும் கள்ளும், அதைப் பதமாக உருமாற்றி விற்கும் பதநீரும், பறித்து வீசும் ஓலையும் வயிற்றுப் பிழைப்புக்கானதே. ஆனால், அத்தொழிலில் அவர்கள் சந்திக்கும் சவால்களும், சுரண்டல்களும், அரசாங்கத்தின் பாராமுகமும் வேதனையின் சாட்சியாக இப்படத்தில் வெளிப்படும். 1990 கால கட்டதில் நடப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதீப் செல்வராஜ், அபிநயா, ஸரத்ராஜ், வாசுதேவன், ரவி, ராம்கி, ராஜசிம்மன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள புதுப்பாக்கம், பாலக்காடு கிராமங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.