படம் வெளிவருவதற்கு முன்பே, அப்படத்தை பார்த்த பிரபலங்கள் வாயிலாகப் படம் குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்து வருதுண்டு. அந்த வரிசையில் இடம் பிடிக்கிறது "தேன்'. "தகராறு', "வீர சிவாஜி' என இதுவரை கமர்ஷியல் சினிமாக்களில் பயணித்த இயக்குநர் கணேஷ் விநாயகன், இந்த முறை மாற்றுத்தளத்தில் பயணித்து இதைப் படமாக்கி இருக்கிறார். இந்தியன் பனோரமா விருது, கோவா திரைப்பட விழா விருது என இப்போதே அங்கீகாரங்களைப் பெற்று வந்திருக்கிறது படம். இது குறித்து இயக்குநர் பேசும் போது..... "" எந்த ஒரு கதைக்கும் மனித வாழ்வுதான் அடிப்படை. நேர்மை, நியாயம், கோபம், அன்பு என மாறிக் கொண்டே இருக்கும் வாழ்வின் மாயங்களை கடந்த சினிமா எங்கேயும் இல்லை. அனுதினங்களின் எதார்த்தங்களில் இருந்து இந்தக் கதையைப் பிரிக்கவே முடியாது. ஒரு வாழ்வின் மணமும் குணமும் நிரம்பியிருந்தால், அது நல்ல சினிமா. இந்த இலக்கணத்தைக் கொண்டே இதை எழுதியிருக்கிறேன்.
மனிதர்களுக்குச் சமூகத்தின் மேல் பொறுப்பு வேண்டும் என்கிற நேரத்தில், இந்த சமூகத்தின் மீது அவர்களுக்கு வெறுப்பு இருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு தேசம் அதன் எளிய மனிதர்களை அனுசரிக்க முடியாததுதான் இங்கே பிரச்னை. நிராகரிப்புகளும், புறக்கணிப்புகளும் மலிந்து விட்ட இந்த சமூகத்தின் மேல் எளியவர்களுக்குக் கோபம் வருவது இயல்புதான். மற்ற பிரச்னைகள் எல்லாவற்றையும் விட, கல்வியால், ஜாதியால் எழுகிற பாகுபாடுகள் இங்கே பெரிய பிரச்னை. இப்படித்தான் இந்த கதை போகும். இந்த நேரத்தில் என் கனவுகளுக்கு மதிப்பளித்து வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் அம்பலவாணனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வணிகம் என்பதைத் தாண்டி இந்தக் கதையைப் புரிந்து தயாரித்த அவருக்கு என் நன்றிகள்'' என்றார் கணேஷ் விநாயகன்.