ரத்தத்தின் ரத்தமே... - 22

உலகின் ஒவ்வொரு மூலையிலும், ஆயிரமாயிரம் கண்டுபிடிப்புகள், சாதனைகள், உருவாக்கங்கள், அதிசயங்கள் ஆகியவைகளை தினந்தோறும் அறிவார்ந்த, திறமை வாய்ந்த, அதிபுத்திசாலியான சில மனிதர்கள்
ரத்தத்தின் ரத்தமே... - 22

உலகின் ஒவ்வொரு மூலையிலும், ஆயிரமாயிரம் கண்டுபிடிப்புகள், சாதனைகள், உருவாக்கங்கள், அதிசயங்கள் ஆகியவைகளை தினந்தோறும் அறிவார்ந்த, திறமை வாய்ந்த, அதிபுத்திசாலியான சில மனிதர்கள் செய்துகொண்டே தான் இருக்கிறார்கள்.

கூட்டுக்குடும்பமாக வாழும் காட்டுக்கு ராஜாவாகிய சிங்கத்தைக் கூட தன் வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டியைப் போல அன்பை செலுத்தி தன் வசப்படுத்தி தான் சொன்னதையெல்லாம் செய்யக்கூடிய அளவுக்கு அன்புக்கு அடிமையாக ஆக்கி விடுகிறான் மனிதன்.

6 டன் எடையுள்ள மிகப் பெரிய விலங்காகிய யானையை தன் பின்னால் வரவைத்து தான் சொன்னதையெல்லாம் செய்ய வைக்கிறான் 60 கிலோ எடையுள்ள மனிதன். மனிதனின் நவீன கண்டுபிடிப்புகளும் மனிதனின் விநோத செயல்களும் எப்படி இவனால் இதையெல்லாம் செய்ய முடிகிறது? என்கிற ஆச்சரியத்தை நம் எல்லோருடைய மனதிலும் தினந்தோறும் ஏற்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது.

தன் வீட்டின் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு ஆயிரமாயிரம் மைல்களுக்கு அப்பால் தான் பார்த்து ரசித்த மறக்க முடியாத சில காட்சிகளை சில நொடிகளில் நினைவுபடுத்தி தன் கண்முன்னே கொண்டு வந்து நிற்கச் செய்து ரசிக்கச் செய்கிறது இன்புறச் செய்கிறது மனிதனின் மனம்.

ஆறடி உடம்பின் மேலே உச்சந்தலையின் உள்ளே அமர்ந்திருக்கும் சுமார் 3 பவுண்டு எடையுள்ள மூளை தான் இந்த அதிசய விநோதங்களையெல்லாம் தினம் தினம் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது.

மூளை மனிதன் மற்றும் விலங்குகளின் மண்டை ஓட்டுக்குள் மிகப் பத்திரமாக உட்கார்ந்திருக்கும் மிக மிக முக்கியமான ஓர் உறுப்பு ஆகும். சுமார் 1300 கிராம் (1.3 கிலோ) எடையேயுள்ள மூளையின் செயல்கள் அனைத்தும் அற்புதமும் அதிசயமும் ஆச்சரியமும் ஆனவையே. மூளையின் செயல்கள்தான் ஆச்சரியமாக இருக்கிறது என்று நினைத்தால் மூளையின் வளர்ச்சி அதைவிட ஆச்சரியமாக இருக்கிறது. பிறந்த ஒரு குழந்தையின் வயது கூடக்கூட அதனுடைய உடல் உறுப்புகள் ஆண்டுதோறும் பெரிதாக வளர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் மூளையின் வளர்ச்சி மட்டும் அப்படியல்ல.

வயது கூடக்கூட மூளையின் எடை மட்டும் குறைந்துகொண்டே வரும். ஒரு குழந்தை பிறந்து சுமார் 2 வயது ஆகும் வரை அதனுடைய மூளை வளர்ந்து கொண்டே இருக்கும். 2 வயது முடியும் போது ஒரு முழு வயது நிரம்பிய மனிதனுக்கு உள்ள மூளையில் சுமார் 80 சதவீதம் மூளை வளர்ந்து விடும். அதற்குப்பிறகு மூளையின் வளர்ச்சி மிக மிகக் குறைவே. இதுவும் ஓர் ஆச்சரியமான விஷயம் தானே!

உடலின் மொத்த எடையில் 2 சதவீதம் மூளையின் எடை ஆகும். உதாரணத்திற்கு சுமார் 65 கிலோ எடையுள்ள ஒரு மனிதனுடைய மூளையின் எடை சுமார் 1300 கிராம் ஆகும். பெண்களின் மூளையை விட ஆண்களின் மூளை சற்று பெரிதாக இருக்கும். உலகிலேயே மூளையின் எடை மிக அதிகமாகவுள்ள விலங்கு திமிங்கிலம் தான். சுமார் 9 கிலோ எடை வரை இதன் மூளை இருக்கும். மனிதனைப் போல் மூன்று மடங்கு அதிக எடையுள்ள மூளையைக் கொண்டது யானை. சுமார் 4 கிலோவிலிருந்து 6 கிலோ வரை இருக்கும்.

மனிதனின் மூளையில் சுமார் 1400 கோடி முதல் 1600 கோடி வரை நியூரான்கள் அதாவது நரம்பு உயிரணுக்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. மனித மூளை ஒரு நவீன கம்ப்யூட்டருக்கு இணையானது. மனித மூளை ஒரு உயிரியல் கணினிஆகும்.

மனித மூளை ரசாயனப் பொருள்களை உபயோகித்து தகவல்களை செலுத்து
கிறது. தகவல்களை கடத்துகிறது. தகவல்களை பரிமாற்றம் செய்கிறது. அதே மாதிரி எலெக்ட்ரானிக் கம்ப்யூட்டர் மின்சாரத்தை உபயோகித்து தகவல்களை பரிமாற்றம் செய்கிறது. மூளையில் உண்டாகும் மின் சமிக்ஞைகள் (சிக்னல்கள்) நரம்பு மண்டலம் வழியாக உடலின் பல பாகங்களுக்கும் மிக வேகமாக செலுத்தப்படுகிறது.

இதே மாதிரி தான் எலெக்ட்ரானிக் கம்ப்யூட்டரில் உண்டாகும் மின் சிக்னல்கள் மின்சார ஒயர்களின் வழியாக மிக வேகமாக செலுத்தப்படுகிறது. (இரண்டுமே தகவல் பரிமாற்றம்தான் செய்கிறது) ஆனால், மூளை அனுப்பும் சிக்னலின் வேகத்தை விட கம்ப்யூட்டர் அனுப்பும் சிக்னலின் வேகம் அதிகம் என்று சொல்கிறார்கள். கம்ப்யூட்டரை கண்டுபிடித்ததும் மனித மூளை தானே பிழைத்துப் போகட்டும். விட்டுவிடலாம். இப்பொழுது மூளைக்கு ரத்த சப்ளை எப்படி என்கிற விஷயத்துக்கு வருவோம்.

மொத்த உடல் எடையில் சுமார் 2 சதவீதம் தான் மனித மூளையின் எடையாக இருந்தாலும், உடலின் மொத்த ரத்த சப்ளையில் சுமார் 15-லிருந்து 20 சதவீதம் ரத்த சப்ளை மூளைக்குத் தான் அதிகமாகக் கிடைக்கிறது. ஏனெனில், ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம், கொஞ்சம் நேரம் மூளைக்குக் கிடைக்கவில்லை என்றாலும், மூளையின் செல்கள் உடனே இறந்துவிடும். ஆகவே, ரத்த சப்ளையைப் பொருத்தவரை, உடலிலேயே மூளைக்குத் தான் முதல் முக்கியத்துவம்.

மற்ற உறுப்புகளுக்கெல்லாம் அப்புறம்தான். உடலின் மெயின் ஸ்விட்ச் மூளைதானே இருதயத்திலிருந்து வெளிவரும் மிகப்பெரிய சுத்த ரத்தக் குழாயிலிருந்து நேராக மூளைக்கு ஒரு சப்ளையும், முதுகெலும்புக்குச் செல்லும் சுத்த ரத்தக் குழாயிலிருந்து இன்னொரு சப்ளையும் மூளைக்குக் கிடைக்கிறது. ஒன்று பழுதானால் இன்னொன்று பார்த்துக் கொள்ளும்.

மூளையிலுள்ள மிக நுண்ணிய திசுக்களும், மிக நுண்ணிய ரத்தக் குழாய்களும் பின்னல் போன்று ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து, வலை போன்ற ஓர் அமைப்பை மூளைக்குள் உருவாக்கிக் கொள்கிறது. மூளைக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய, மிக நுண்ணிய பொருள்கள் ஏதாவது மூளைக்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், இந்த பின்னல் வலை ஏற்பாடு. மூளையிலிருக்கும் சிறிய, பெரிய ரத்தக் குழாய்கள், மூளைக்கு ஒரு போர்ப்படை மாதிரி வேலை செய்கின்றன.

மூளை மிகவும் மென்மையானது. மிருதுவானது. அழகானது. ஆச்சரியமானது. ஆபத்தானதும் கூட. மூளையிலுள்ள ரத்தக் குழாய்களைப் பொருத்தவரை இவைகள் மூளைக்கு ஒரு பாதுகாப்பு அரண் என்று கூடச் சொல்லலாம். ரத்தத்துக்கும் மூளைக்கும் நடுவில் ஒரு தடுப்பணை போல இவைகள் வேலை செய்கின்றன.

மூளைக்கு ஒரு நிமிடத்துக்கு சுமார் 750 மில்லி லிட்டர் ரத்தம் வந்து போகிறது. மூளைக்கு எப்பொழுதும் சுத்த ரத்தம் வேண்டும். நிறைய ஆக்ஸிஜன் வேண்டும். நிறைய சத்துப் பொருள்களும் வேண்டும். மூளைக்குள் உண்டாகும் ரத்தச் சுற்றுலாதான், மூளைக்குத் தேவையான பொருள்களை கொண்டு செல்கிறது.

மூளைக்குப் பாதுகாப்பு அரண் போல செயல்படும் மூளையிலுள்ள ரத்தக்குழாய்கள், தண்ணீர், ஆக்ஸிஜன், மிக முக்கிய சத்துப்பொருள்கள், சில மருந்துகள், போன்றவைகளைத் தவிர, மற்ற பொருள்களை மூளைக்குள் போக விடுவதில்லை.

மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த சில முக்கிய உணவுப் பொருள்களை சாப்பிடலாம்.

பீட்ரூட், சாக்லேட், அமினோ அமிலம் நிறைந்த உணவுகளாகிய முட்டை, இறைச்சி வகைகள், பாலாடைக் கட்டி, இனிப்பு, தயிர், பூசணி விதை, வேர்க்கடலை, சோயாத் தயிர், சூரியகாந்தி விதை, முந்திரி, பாதாம், பிஸ்தா, கீரை வகைகள், பால், மீன் வகைகள், சுண்டல், வாழைப்பழம், கொய்யா, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, புரதபாசி, சால்மன் மீன்வகைகள், மாம்பழம், உருளைக்கிழங்கு, மிளகு, வெண்ணெய், வாதுமை பழம், ஆப்பிள், மாதுளை, கேரட், வெள்ளரிக்காய், பூண்டு, முள்ளங்கி, காளான், சோளம், பழுப்பு அரிசி, சீமைத்தினை, எள் முதலியவைகளில் மூளைக்குத் தேவையான முக்கிய 9 அமினோ அமில சத்துக்கள், மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைய இருக்கின்றன. எனவே இவைகளில் ஏதாவதொன்றை, மாற்றி மாற்றி தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், மூளைக்கு ரத்த ஓட்டம் நன்கு கிடைக்கும்.

மூளைக்கு ரத்தம் குறைவாகத்தான் கிடைக்கிறது என்பதை எப்படி கண்டுபிடிப்பது? பேச்சு குழறுதல், கை கால்களில் அதிக சோர்வு ஏற்படுதல், உணவை விழுங்க முடியாமல் போதல், நேராக நிற்க முடியாமல், நிலை தடுமாறுதல், பார்வை மங்கலாகுதல், தலை சுற்றல், தலைவலி, தலைகனம், உடல் மரத்துப் போதல், குழப்பமான சூழ்நிலை ஏற்படுதல். பெரும்பாலும் கழுத்துக்கு மேலே உள்ள பகுதியில், மேற்கூறிய பிரச்னைகள் தெரியவந்தால், உடனே உங்கள் குடும்ப டாக்டரையோ அல்லது நரம்பியல் மருத்துவ நிபுணரையோ பார்ப்பது நல்லது.

மூளைக்கு ரத்த ஓட்டம் குறைவது என்பது பெரும்பாலும் கொழுப்பு அதிகமாகி ரத்தக் குழாய்களை அடைத்துக் கொள்வதுதான். கொழுப்பு எப்படி கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து உருண்டு திரண்டு ஒரு கட்டியாக மாறி மூளையிலுள்ள ரத்தக் குழாயை அடைத்துவிடுகிறதோ அதுபோலத்தான் சில சமயங்களில் ரத்தம் உறைந்து கட்டியாகி அந்தக் கட்டி மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயை அடைத்து மூளைக்கு ரத்தம் செல்லவிடாமல் தடுத்துவிடுகிறது. இதே போல சில சமயங்களில் உடலின் எங்கோ ஒரு முளையில் உருவாகும் ரத்த உறைவுக்கட்டி ரத்தம் வழியாக மெல்ல மெல்ல நகர்ந்து மூளைக்குள் வந்து மூளைக்குள் போகும் ரத்தக்குழாயை அடைப்பதுண்டு.

பக்கவாதம், மாரடைப்பு, குறைந்த ரத்த அழுத்தம் முதலியவை உள்ளவர்களுக்கு, மூளைக்குப் போகும் ரத்தம் குறைபடும். இதனால் மூளைக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜனும் குறைபடும். ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தால் என்னவெல்லாம் ஏற்படும் என்பதை சமீபத்திய கரோனா நோய்த் தாக்குதல், பொதுமக்கள் எல்லோருக்கும் நன்கு புரிய வைத்திருக்கும்.

வயிறு காலியானால் ஞாபகப்படுத்தும். ஆனால் மூளை காலியானால் ஞாபகப்படுத்தாது. நாம்தான் தெரிந்து கொண்டு உஷாராக இருக்க வேண்டும். எப்பொழுதும் நல்ல எண்ணங்கள் மனதில் தோன்ற வேண்டும். மனது சுத்தமாக இருக்க வேண்டும். உள்ளம், மனசு, அறிவு, ஆன்மா, புத்திசாலித்தனம், படைப்பு, உணர்ச்சி, நினைவு, அன்பு, ஆசை, கருணை, காதல், கனவு, களவு, கோபம், ஞாபகம் யோசித்தல் ருசி பசி - இந்த செய்கைகள் அனைத்தும் மூளைக்குச் சொந்தமானவை. சுமார் 1.30 கிலோ எடையுள்ள மூளை உடலின் மொத்த செய்கைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பதை சற்று நினைத்துப்பாருங்கள். மூளையை எப்பொழுதும் உற்சாகமாக வைத்திருங்கள். கெட்ட எண்ணங்களை யோசிக்காதீர்கள். செய்யாதீர்கள்.

மூளைக்கு ரத்த ஓட்டம் குறைந்தால்... அவ்வளவுதான். மின்சாரம் இல்லாமல் போனால் உலகம் என்னாகும்? சூரியன் காலையில் வராமல் போனால் உலகம் என்னாகும்? விடியாமலே போனால் மறுநாள் உலகம் என்னாகும்? அதுபோலத்தான் இதுவும். எனவே மூளையை நன்றாக வைத்துக் கொள்ளுங்கள். நன்றாக உபயோகப்படுத்துங்கள். நன்றாகவாழுங்கள்.


மூளைக்கு ரத்தம் மூலமாக ஆக்ஸிஜன் அதிகம் கிடைக்க...


1) வயிற்றை சாதாரணமாக வைத்துக் கொண்டு சுவாசித்துப் பழகுங்கள். வயிற்றின் மூலமாக சுவாசித்துப் பழகுவதைவிட மார்பின் மூலமாக சுவாசித்துப் பழகுவது நல்லது.

2) மூக்கு வழியாக சுவாசித்துப் பழகுங்கள். வாய் வழியாக வேண்டாம்.

3) ஒரே நாளில் நீண்ட தூரம் மொத்தமாக நடப்பதைவிட ஒரு நாளில் பலமுறை கொஞ்சம் கொஞ்சம் தூரமாக நடப்பது நல்லது.

4) தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது

5) ஒரே இடத்தில் எப்பொழுதும் உட்கார்ந்தோ படுத்தோ இருக்காமல் காலரா அங்கும் இங்கும் நடந்து கொண்டிருங்கள்.

6) சில நிமிடங்கள் மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் பண்ணிப் பழகுங்கள்.

7) உங்களுக்குப் பிடித்த பாடல்களை கேட்டு மகிழுங்கள். பாடி மகிழுங்கள்.

8) மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளப் பழகுங்கள்.

9) ஏதாவதொரு விளையாட்டை தேர்ந்தெடுத்து சிறிது நேரம் விளையாடுங்கள்.

10) நன்றாக தூங்குங்கள்.

11) ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகங்கள் நிறைய படியுங்கள்.

12) ஆரோக்கியமான சத்தான உணவுகளை சாப்பிடுங்கள்.
 

-தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com