தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளருமாக உள்ள உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா. பன்முக திறமைக்கொண்டவர், "வணக்கம் சென்னை' படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிப் பெற்ற இப்படத்தில் நடிகர் சிவா, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அதன் பிறகு விஜய் ஆண்டனியை வைத்து "காளி' படத்தை இயக்கினார். கடந்த 3 வருடங்களாக படங்கள் எதுவும் இயக்காமல் இருந்த கிருத்திகா தற்போது புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். கிருத்திகாவின் மூன்றாவது படமாக உருவாகும் இந்த படத்தில் பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தின் கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கவுள்ளார். வாழ்வின் பயணத்தை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தை ரைஸ் ஈஸ்ட் படத் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. ரிச்சர்ட் எம் நாதன் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.