தூத்துக்குடி மாநகராட்சியில் பயன்படுத்த முடியாத டிரம் மூலம் சோபா, டீ பாய் போன்ற பொருள்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் தயாரித்து மாநகராட்சி அலுவலக வாயிலில் மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்.
எப்படி இந்த எண்ணம் உருவானது மாநகராட்சி சுகாதார அதிகாரி ஸ்டாலினிடம் கேட்டோம்:
""தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 50 முதல் 55 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இதில் பயன்படுத்த முடியாத பொருள்களை சேகரித்துத் தனியாக வைத்திருப்போம். அதனை ஆணையர் ஷரண்யா அரி அறிவுறுத்தலின் பெயரில் கடந்த ஆண்டு குப்பைகளாக சேகரிக்கப்பட்ட தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்திக் கழிவறை ஒன்றை உருவாக்கினோம். தொடர்ந்து டிரம்களை என்ன செய்யலாம் என்று ஆலோசித்த போது அவற்றை சோபா, டீபாய்களாக மாற்றும் முயற்சியில் இறங்கினோம். இதற்காக டிரம் தவிர மருந்து அடிக்கும் ஸ்பிரே மிஷினில் பயன்படும் பயன்படாத கழிவு டியூப், காஸ் அடுப்பில் உள்ள பயன்படாத டியூப், தேங்காய் நார் உள்ளிட்ட பொருள்களைப் பயன்படுத்தி இந்த சோபாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
மூன்று சோபா, ஒரு டீபாய் உள்ளிட்டவற்றைத் தயாரிப்பதற்கு 5 ஆயிரத்துக்கும் குறைவாகத்தான் செலவாகிறது. ஆனால் இதனை விலைக்கு விற்றால் 10 ஆயிரம் வாங்க தயாராகயிருக்கிறார்கள். ஆனால் மாநகராட்சி பூங்காக்களில் இதனைத் தயாரித்துப் பயன்படுத்தும் முயற்சியில் இப்போது செயல்பட்டு வருகிறோம். எங்களுடைய இந்தக் கலைப்பொருள்களை உருவாக்கும் முயற்சி தொடரும். அதனுடைய வடிவங்கள் தான் இனி மாறும்'' என்கிறார் ஸ்டாலின்.