முன்னோர்கள் வகுத்துக்கொடுத்த வாழ்க்கை முறையைத் தொலைத்துவிட்டோம். இதனால் பல நோய்கள் தாக்கும் அபாயத்துக்குள் சிக்கிக்கொண்டுள்ளோம். அவற்றில் ஒன்று, மாரடைப்பு!
சிலர் இளவயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைகிறார்கள். அதுவும் கார் ஓட்டும்போது மாரடைப்பு வந்தால் நடக்கும் விபரீதத்தை நினைத்து கூட பார்க்க முடியாது. இதனை கருத்தில் கொண்டு கார் ஓட்டும் போது மாரடைப்பு ஏற்பட்டால் கண்டறியும் தொழில்நுட்பவசதியை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகிறார்கள். இதன் மூலம் மாரடைப்பால் ஏற்படும் வாகன விபத்துகள் தடுக்கப்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஜப்பான் கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா, ஆய்வாளர்களுடன் இணைந்து ஓட்டுநரின் மனநிலையை உணர்ந்து எச்சரிக்கை செய்யும் வசதியை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்." உயர் அழுத்த எலெக்ட்ரோ கார்டியோகிராம் (ஈ.சி.ஜி.) மற்றும் பல மருத்துவ அளவீடுகளை வைத்து ஓட்டுநரின் மனநிலையை கார் உணரும்' என்று அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர் கேவ்யன் நஜாரியன் கூறுகிறார். இந்த ஆய்வாளர் குழுவின் சோதனை 2021-ஆம் ஆண்டு நிறைவு பெறுமாம்.