தாயைவிட என் மீது அதிக அன்பு கொண்டிருந்தவர் என் ஆசான் என்று தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரால் புகழப்பட்டவரும் பிற்காலக் கம்பர் என்று போற்றப்பட்டவருமான தமிழ் அறிஞர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. திருச்சி அருகேயுள்ள எண்ணெயூரில் 1815-இல் பிறந்தார்.
தமிழ்ப் புலவரான தன் தந்தையிடமே தமிழ் கற்றார். அபார நினைவாற்றல் கொண்டிருந்த இவர், பாடல்களைப் படித்த வேகத்தில் மனதில் பதிய வைத்துக் கொண்டுவிடுவார். சிறுவயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்ற இவர், பின்னாளில் சபாபதி முதலியார், அம்பலவாண தேசிகர் உள்ளிட்ட பல தமிழ் அறிஞர்களிடம் கல்வி பயின்று புலமையை வளர்த்துக்கொண்டார்.
திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகர் திருக்கரங்களால் இவருக்கு "மகா வித்வான்' என்ற பட்டம் வழங்கப்பட்டது. பிள்ளையவர்கள் காவேரியாச்சி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர் புதல்வர் சிதம்பரம் பிள்ளை.
19-ஆம் நூற்றாண்டில் தமிழில் அதிக நூல்களை இயற்றியவர் இவரே. பிள்ளைத் தமிழ் நூல்களாகப் பாடியதால் பிள்ளைத் தமிழ் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்று புகழப்பட்டார். சிற்றிலக்கிய காலத்தில் வாழ்ந்த இவர் ஏராளமான தல புராணங்கள் பாடியுள்ளார். திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவரான இவரிடம் கல்வி பயில வரும் அனைவரையும் தன் சொந்தப் பிள்ளைகளாகவே பாவித்து உணவும், உறைவிடமும் அளித்து கல்வி புகட்டினார்.
உ.வே.சா, குலாம் காதர், நாவலர், சவுரி ராயலு நாயக்கர் போன்ற பலர் அவரிடம் பயின்றவர்கள், மாயூரம் வேதநாயகம் பிள்ளையுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். அவரைப் பாராட்டி "குளத்துக்கோவை' என்னும் நூலை இயற்றினார்.
சங்கீதத்தில் பற்றுக் கொண்டிருந்த இளைஞர் உ.வே.சாவை தமிழில் ஆர்வம் கொள்ள செய்து ஆற்றப்படுத்தியது பிள்ளையவர்களின் சிகரமான தமிழ்த்தொண்டு ஆயிற்று.