தங்கம், பிளாட்டினம், வைரம் போன்ற உலகின் அரிய வகை நவரத்தினங்களை காட்டிலும் விலைமதிப்புமிக்க மரம் ஒன்று இருக்கிறது. அந்த மரத்தின் பெயர் "அகர் மரம்'. அக்குலேரியா என்ற மரத்தின் ஒருவகைதான் இந்த அகர் மரம்.
இந்த மரத்துக்கு வேறு சில பெயர்களும் உண்டு. அவை கற்றாழை மரம் அல்லது கழுகு மரம். ஜப்பானில் கியாரா அல்லது கயனம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியா, ஜப்பான், அரேபியா, சீனா, மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் போன்றவற்றில் அதிக அளவு காணப்படுகிறது. இந்த மரமே உலகின் மிக அரிதான விலை மதிப்புமிக்க ஒரு மரமாகும்.
இந்த மரத்தின் ஒருகிலோ கட்டைக்கு இருக்கும் விலையை தெரிந்தால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள். ஒரு கிலோ அகர் மரக்கட்டியின் விலை அமெரிக்க மதிப்பில் 1,00,000 டாலர். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 73 லட்சம்.
முன்னணி வணிக செய்தி நிறுவனமான "பிசினஸ் இன்சைடர்' வெளியிட்டுள்ள மதிப்பு இதுவாகும். இந்த "அகர் மரம்' அதிக மதிப்புள்ளது தானே. இந்த அகர் மரத்தின் முக்கியப் பயன்பாடு வாசனை திரவியங்கள் மற்றும் பிற நறுமண பொருட்கள் தயாரிப்பில் பெரும் பங்கு வகிக்கிறது. கட்டைகள் மட்டுமல்ல, இந்த மரம் சிதைந்த பின்பும் அதன் எச்சங்களை நறுமண பொருட்கள் உற்பத்தியில் பயன்படுத்த முடியும்.
இதே மரத்தில் இருந்து கிடைக்கும் பிசின் மூலம் ஒருவகை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் வாசனை திரவியங்களின் தயாரிப்பில் அத்தியாவசிய எண்ணெய்யாக இருக்கிறது. தற்போதைய நிலையில் இந்த எண்ணெய் ஒரு கிலோ 25 லட்ச ரூபாய் ஆகும்.
இந்த வகையை சேர்ந்த பல மரங்கள் இப்போது சீனா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளில் இருக்கின்றன.