வி.எம். புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "இரண்டாம் நகர்வு'.
இயக்கி தயாரித்திருப்பதோடு, கதாநாயகனாகவும் இப்படத்தில் நடிக்கிறார் வினோத் சிரஞ்சீவி. ஆஞ்சல், கெனிஷா பிராஞ்சீஸ், குறிஞ்சி, மது, அவினாஷ், அரவிந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இயக்குநர் பேசும் போது.... "" ஒரு குற்றமும், அந்தக் குற்றத்தை செய்ய தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். ஒரு குற்றத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அது அந்த மனிதனை எங்கே நிறுத்துகிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். அதை ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான சட்டகத்துக்கு உட்பட்டு, செய்து முடித்திருக்கிறேன்.
அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசைகளைத் தீர்மானிக்கும். அது நல்லதோ கெட்டதோ... சில நிமிடங்கள், சில விநாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கும் மாறி விடும். அப்படித்தான் இங்கே ஒரு சூழல். ஒவ்வொரு கணமும் ஒரு அனுபவம். அனுபவமே கடவுள் என்று உணருகிற போதுதான் எல்லாமே தெரிகிறது. ஆசையே துன்பத்துக்கு காரணம் என புத்தர் உணர்ந்தது சிறு விநாடிதான். ஆனால், அவர் கடந்து வந்த தூரம் ஒரு வனத்தை கடந்த மாதிரி. இதுதான் இந்த கதையின் அடிப்படை. இந்த கதை வழக்கமான பார்வைதான். ஆனால், அதை தாண்டிய சுவாரஸ்யங்கள் ஒளிந்து கிடக்கின்றன. சென்னை மற்றும் பெங்களூரில் படமாக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 9- ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது'' என்றார்.