என்.வி.நிர்மல்குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் "சலீம்'. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. "மழை பிடிக்காத மனிதன்' என்று தலைப்பிடப்பட்ட இப்படத்தை விஜய் மில்டன் எழுதி, இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டையூ, டாமன் பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2022-ஆம் ஆண்டு திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
கதாநாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க விஜயகாந்தைப் படக்குழு அணுகியதாகக் கூறப்படுகிறது. படத்தில் விஜயகாந்த் கதாபாத்திரத்தைச் சுற்றியே கதை நகரும் என்பதால் அதில் அவரை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு விஜயகாந்த் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், வரும் ஜனவரி மாதம் விஜயகாந்த் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் திரையுலக வட்டாரங்களில் கூறப்படுகிறது.