கரோனா இரண்டாம் அலையின் பொது முடக்கம் காரணமாக அனைத்து நிகழ்வுகளும் முடக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் மட்டும் விதிவிலக்கா என்ன? அதுவும் முடங்கியுள்ளது. அதனால் கிரிக்கெட் வீரரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான தோனி தனது சொந்த ஊரான ராஞ்சிக்குச் சென்றுவிட்டார்.
தோனிக்கு மகள் ஸிவா மீது அளவில்லா பிரியம். பல வித பொம்மைகள் வாங்கிக் கொடுத்ததுடன் மகள் கேட்டதன் பேரில் வெண்ணிற குதிரைக் குட்டி ஒன்றையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
கிரிக்கெட் விளையாட முடியாத இந்த காலகட்டத்தில் தோனி தன் பொழுதைக் கழிக்க கை கொடுத்துவருவது இந்தக் குதிரை தான். குதிரையைப் பராமரிப்பதில் தோனியின் பொழுது கழிகிறது. சில வாரங்களுக்கு முன் குதிரையுடன் விளையாடும் படங்கள் சமூக தளங்களில் வைரல் ஆனது.
மேலும் குதிரையை தனது பங்களாவின் பரந்த புல்வெளியில் ஓடவிட்டு, குதிரையின் ஓட்டத்திற்கு இணையாக ஓடி தோனி ஒட்டப்பயிற்சி செய்ய, தோனியின் மனைவி சாக்ஷி அதை காணொளியாகப் படம் பிடித்து இன்ஸ்ட்டாகிராமில் பதிவேற்றம் செய்ய.... அந்த காணொளி அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாகியிருக்கிறது.