தடகள வீராங்கனை வாழ்க்கை
By DIN | Published On : 21st March 2021 06:00 AM | Last Updated : 21st March 2021 06:00 AM | அ+அ அ- |

தடகள வீராங்கனை சாந்தி சௌந்தரராஜனின் வாழ்க்கை படமாகிறது. 888 புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்துக்கு "சாந்தி சௌந்தரராஜன்' என்றே பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு 12 சர்வதேச பதக்கங்களையும், தமிழகத்துக்கு 50 பதக்கங்களுக்கு மேல் வென்ற தடகள வீராங்கனை சாந்தி சௌந்தரராஜன். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ் பெண் சாந்தி சௌந்தரராஜன். இவருக்கு 2006-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடத்தப்பட்ட பாலின சோதனையின் அறிக்கையின் அடிப்படையில், பெண்களுக்கான போட்டியில் தகுதி மறுக்கப்பட்டு அவர் வென்ற வெள்ளிப் பதக்கம் அவரிடமிருந்து திரும்பிப் பெறப்பட்டது. இதையடுத்து அவர் தடகள போட்டிகளிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்.
அவர் வாழ்க்கையில் நடந்த, இதுவரை வெளிவராத பல சுவாரஸ்யமான சம்பவங்கள் மற்றும் திருப்பங்களுடன் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சாந்தி சௌந்தரராஜனின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மூன்று நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ் புத்தாண்டு தினத்தன்று அவர் பெயர் அறிவிக்கப்படவுள்ளது. ஜிப்ரான் இசையமைக்கிறார். ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்கிறார். பாடல்களை யுகபாரதி எழுத, வசனங்களைப் பொன் பார்த்திபன் எழுதியுள்ளார். மேலும் ஒளிப்பதிவு - கோபிநாத். படத்தொகுப்பு - சங்கத்தமிழன். முதற்கட்ட படப்பிடிப்பு, புதுக்கோட்டை அருகே உள்ள சாந்தி சௌந்தரராஜனின் கிராமத்தில் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து பஞ்சாப், கத்தார், ஓமான் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது. ஜெயசீலன் தவப்புதல்வி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...