ரத்தத்தின் ரத்தமே... -14

நமது உடலுக்குள் ரத்தம் ஒன்றுதான் 24 மணி நேரமும், 365 நாள்களும் ஆயுள் முழுக்க ஓடிக்கொண்டிருக்கும் ஒரே திரவப் பொருள்.
ரத்தத்தின் ரத்தமே... -14

நமது உடலுக்குள் ரத்தம் ஒன்றுதான் 24 மணி நேரமும், 365 நாள்களும் ஆயுள் முழுக்க ஓடிக்கொண்டிருக்கும் ஒரே திரவப் பொருள்.
ஒரு சராசரி மனிதனுக்கு சுமார் 4 லிட்டரிலிருந்து 6 லிட்டர் வரை ரத்தம் மொத்தமாக உடலில் இருக்கிறது. இந்த மொத்த ரத்தம் பெண்களைவிட, ஆண்களுக்கு சற்று அதிகமாக இருக்கும். அதே மாதிரி, உயரம் அதிகமாக இருப்பவர்களுக்கும், உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கும் மொத்த ரத்தம் சற்று அதிகமாகத்தான் இருக்கும்.
உடலின் பல பாகங்களிலும் பிரிந்து ஓடிக்கொண்டிருக்கும் ரத்தமானது, மணிக்கு சுமார் 3 லிருந்து 4 மைல் வேகத்தில் ரத்தக்குழாய்களுக்குள் ஓடும். மனிதனின் உடலுக்குள் ஓடும் ரத்தத்தின் இந்த வேகமானது, சாதாரணமாக நாம் நடக்கும்போது உள்ள வேகம்தான். மணிக்கு 4 மைல் வேகத்தில் தான், ஆமைகள் கூட நடக்கும். ஆனால் அதே ஆமை, தண்ணீருக்குள் சென்றுவிட்டால், மணிக்கு சுமார் 12 மைல் வேகத்தில் நீந்தும்.
மனித உடலிலுள்ள ரத்தத்தின் ஓட்டம், நம் உடலமைப்புக்கு ஏற்றபடி, மிகக்குறைவும் இல்லாமல், மிக வேகமும் இல்லாமல், மிக மெதுவாக, மிகச் சரியாக,  இயற்கையாக இயற்கையால் உருவாக்கப்பட்டுள்ளது. நமது உடலில் ஓடும் ரத்தத்தின் வேகம் இவ்வளவு மெதுவாக‚ ஆமை வேகத்தில் தான் ரத்தம் உடலுக்குள் ஓடுகிறதா? இந்த ஓட்டத்துக்கே ரத்தக் கொதிப்பு என்கிறார்கள். ரத்த வாந்தி என்கிறார்கள், ப்ரஷர் ரொம்ப அதிகமாக இருக்கிறது என்கிறார்கள். ஆமை வேகத்துக்கே இந்த பிரச்னையெல்லாம் வருகிறதே‚ இன்னும் முயல் வேகத்துக்கு ரத்தம் நம் உடலுக்குள் ஓடினால், அவ்வளவுதான். எல்லா ரத்தக்குழாய்களும் தெறித்து, பிய்த்துக் கொண்டு போய்விடும் போல இருக்கிறதே? என்ற நினைப்பு உங்களுக்கு இப்போது வரும். மனிதனுக்கும், வெவ்வேறு விலங்கு
களுக்கும், அதனுடைய உடலமைப்புக்கு ஏற்றவாறு ரத்த ஓட்டத்தின் வேகம் இயற்கையாக அமையப்பட்டிருக்கிறது.
மனிதனின் உடலமைப்புக்கு, இந்த வேகமே போதுமானது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், ஏதோ ஒரு மருந்தை ஊசி மூலம் நம் கையில் நர்ஸ் போடுகிறார்கள். அந்த மருந்து நம் உடலுக்குள்ளே போகிறது. அந்த மருந்து சில நொடிகளில், அதிகபட்சம் ஒரு நிமிடத்துக்குள் நம் உடல் முழுக்கப் போய்ச் சேர்ந்துவிடுகிறது. இது ஒரு சராசரி வேகம்தான். ஆனால் இந்த வேகம் நமக்கு போதுமானதே.
ரத்த ஓட்டத்தைப் பொருத்தவரை, இருதயம் தான் ஒரு முக்கியமான முதன்மையான உறுப்பு ஆகும். உடலின் மொத்த ரத்த ஓட்டத்தைப் பொறுத்தவரை   1.இருதயம் 2.தமனி என்றழைக்கப்படும் சுத்த ரத்தத்தை சுமந்து செல்லும் ரத்தக்குழாய்கள் 3.நுண்தமனி என்றழைக்கப்படும் சிறிய சிறிய ரத்தக்குழாய்கள் 4.சிரை என்றழைக்கப்படும் அசுத்த ரத்தத்தை சுமந்து செல்லும் ரத்தக்குழாய்கள் 5.நுண்சிரைகள் 6.மயிரிழை போன்ற அளவில் இருக்கும் மிக நுண்ணிய ரத்த தந்துகிகள். இவைகள் தான் உடலின் மொத்த ரத்த ஓட்டத்துக்கும் பொறுப்பாகும்.
24 மணி நேரமும் இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கும், இருதயம் வலுவான தசைகளால் ஆனது. இதில் நான்கு சின்னச் சின்ன அறைகள் அல்லது டப்பாக்கள் உள்ளன. மேலே 2 அறைகளும் கீழே 2 அறைகளும் இருக்கின்றன. இருதயத்தின் வலது பக்கத்திலுள்ள மேல் கீழ் அறைகள் (2) அசுத்த ரத்தத்தையும் இருதயத்தின் இடது பக்கத்திலுள்ள மேல் கீழ் அறைகள் (2) சுத்த ரத்தத்தையும் சுமக்கிறது.
இருதயத்தின் முக்கியமான வேலை தனது வலது பக்க அறைகளுக்கு வரும் அசுத்த ரத்தத்தை நுரையீரலுக்கு சுத்தப்படுத்துவதற்காக ஆக்ஸிஜனை நிரப்புவதற்காக அனுப்புவது. அதே மாதிரி இடது பக்க அறைகளுக்கு ஆக்ஸிஜனை சுமந்து கொண்டு நுரையீரலிலிருந்து வரும் சுத்த ரத்தத்தை உடல் முழுவதுக்கும் அனுப்புவது. இருதயத்துக்கு உள்ளே வந்து கொட்டும் ரத்தத்தை உடல் முழுவதும் ஒரே சீராக அனுப்ப நம் வீட்டில் தண்ணீருக்கு உபயோகிக்கும்  மோட்டார் போன்று இருதயத்தில் மோட்டார் எதுவும் கிடையாது. அதற்குப் பதிலாகத்தான் இருதயம் தனது தசைகளை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சீராக அழுத்தி  சுருங்கி விரிந்து சுருங்கி விரிந்து உடல் முழுவதுக்கும் ஒரே வேகத்தில் ரத்தத்தை அனுப்புகிறது.
இதுவரை ரத்த ஓட்டத்தைப் பற்றி நான் சொன்னவற்றைப் படித்துவிட்டு ரத்த ஓட்டம் உங்கள் உடலுக்குள் சரியாக சீராக ஒழுங்காக ஓடுகிறதா ஓடிக்கொண்டிருக்கிறதா என்றெல்லாம் நீங்கள் யோசித்துக் கொண்டு இருக்காதீர்கள். அது அதன் வேலையை யாருடைய உத்தரவும் இல்லாமல் சரியாகத்தான்  செய்து கொண்டு இருக்கிறது. பயப்படாதீர்கள்.
வயிற்றிலிருந்தும் நுரையீரலிலிருந்தும் ஆக்ஸிஜனையும் மற்ற சத்துப் பொருள்களையும் ரத்த ஓட்டம் தன்னுள் சேர்த்துக்கொண்டு உடல் முழுவதுமுள்ள செல்களுக்கும் திசுக்களுக்கும் மற்ற அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்துக் கொண்டு போய் கொடுக்கின்றது. அதே நேரத்தில் செல்களிலும் திசுக்களிலும் உருவாகும் கழிவுப்பொருள்களையும் வேண்டாத பொருட்களையும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் -கூடிய பொருள்களையும் எடுத்துக் கொண்டு நுரையீரல் வழியாகவும் 2 சிறுநீரகங்கள் வழியாகவும் கல்லீரல் வழியாகவும் உடலுக்கு வெளியே அனுப்புகின்றது.
ஆனால் ரத்த ஓட்டத்தில் மிகச்சிறிய அளவிலோ அல்லது மிகப்பெரிய அளவிலோ பாதிப்பு ஏற்பட்டால் மேற்கூறிய செயல்கள் அனைத்தும் தடைபட்டுவிடும். ரத்தக் குழாய்களின் உட்பகுதியில் கொழுப்பு படிதல் ரத்தக் குழாய்களே கடினமாகிவிடுதல் வயது ஆக ஆக ரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை குறைந்துவிடுதல் அதிகமாக சிகரெட் உபயோகித்தல் கடின வேலை செய்யாமல் எந்த வேலையுமே செய்யாமல் சோம்பேறியாக இருத்தல் உடலுக்கு உழைப்பு கொடுக்காமலிருத்தல் உடல் நோயினால் படுத்தே இருத்தல் ஆரோக்கியமில்லாத சுத்தமில்லாத உணவுகளை உட்கொள்ளுதல் ரத்தக் குழாய்களின் உட்பகுதியில் காரை படிந்து அடைத்தல் இன்னும் பல காரணங்கள் ரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கச் செய்யும்.
ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டாலோ ரத்த ஓட்டம் சரிவர நடக்கவில்லை என்றாலோ உடல் முழுவதுமே பாதிப்புக்குள்ளாகும். தோலில் பாதிப்பு உடல் ஜில்லென்று ஆகிவிடுதல் உடல் களைப்பு, அசதி சோர்வு, தலை வலி, தலை சுற்றல், கால், கைகள் மரத்துப் போதல் உடல் வலி பாதங்களில் குண்டூசிகளை வைத்து  குத்துவது போன்றதொரு வலி கால் பாதங்களில் எரிச்சல் ஞாபகச்சக்தி குறைவு கெண்டைக்காலில் அசுத்த ரத்தக் குழாய்கள் சுருட்டிக் கொள்ளுதல், தசைப் பிடிப்பு, இன்னும் பல சொல்ல முடியாத கோளாறுகள் ஏற்பட்டுவிடும். எனவே ரத்த ஓட்டம் உடலுக்குள் சரிவர நடக்க வேண்டும். இது மிக மிக முக்கியம்.
உங்களது உடலில் ரத்த ஓட்டம் எப்போதும் சீராக இருக்க 1.தொடர்ந்து தினமும் ஏதாவதொரு உடற்பயிற்சி செய்யுங்கள். 2.உடலிலுள்ள பெரிய சிறிய தசைகளை மசாஜ் பண்ணி உருவி விடுங்கள். 3.தினமும் அதிக அளவில் தண்ணீர் குடியுங்கள் 4.க்ரீன் டீ என்று சொல்லக்கூடிய தேநீர் தினமும் அருந்திப் பழகுங்கள். 5.உடல் முழுவதுமுள்ள மேல் தோலை (பாலிஷ் அல்லது மாலிஷ்) மெதுவாக தினமும் மெல்லிய துணிகொண்டு தேய்த்தெடுங்கள் 6.மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய காரியங்களை குறைத்துக் கொள்ளுங்கள். 7.சிகரெட் உபயோகித்துக் கொண்டிருந்தால் மெதுமெதுவாக நிறுத்துங்கள். முதல் அபாயம் இதுதான். 8.மதுப் பழக்கத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து நிறுத்திவிடுங்கள். 9.கால்களை அதிக நேரம் தொங்கப் போடாமல் தூக்கி வைத்துக் கொள்ளுங்கள் 10.உடலில் எப்பொழுதும் நிறைய உணவு இருக்கிறதோ இல்லையோ உடல் முழுவதும் எப்பொழுதும் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். உடலில் மொத்த நீரின் அளவு குறைந்தாலே ரத்த ஓட்டம் குறைந்துவிடும். அதிக நீர்ச்சத்து இருந்தால் இருதயத்துக்கும் ரத்தத்தை பம்ப் பண்ணி வெளியே அனுப்பும் வேலை சுலபம். 11.எல்லா சத்துக்களும் நிறைந்த சரிவிகித சத்துணவு சாப்பிட்டுப் பழகுங்கள். 12.மிதமான சூடு தண்ணீரில் தினமும் குளித்துப் பழகுங்கள். கால்களுக்கு மட்டுமல்ல உடல் முழுவதுக்கும் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். 13. ஸ்டீம் பாத் என்று சொல்லப்
படும் நீராவிக் குளியலில் குளிக்க வசதி வாய்ப்பு இருந்தால் செய்து பாருங்கள். 14.உங்களின் இருதயத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு ரத்தம் போகாமல் இருப்பதால் தான்  உங்களுக்கு நெஞ்சு வலி ஏற்படுகிறது. அப்படியென்றால் உங்கள் இருதயத்துக்கு ஆக்ஸிஜன் நிரம்பிய ரத்தம் சரிவர கிடைக்கவில்லை என்று அர்த்தம். ரத்தக் குழாய் அடைப்பினைக் கண்டுபிடித்து உடனே சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்.
இருதயம் உடலோடு சேர்ந்தது. இதயம் மனதோடு சேர்ந்தது. இதயத்தை நன்றாக வைத்துக் கொண்டால் இருதயம் எப்பொழுதும் நன்றாக இருக்கும். இயங்கும்.

 -தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com