இந்தியா சுதந்திரம் அடைந்தபோது உடனடி தகவல் பரிமாற்றங்கள் இல்லாததால் விடியற்காலை பொழுதில் மக்களின் ஆரவாரம் மூலம்தான் அறிய முடிந்தது என்றார் தியாகி ஈ.வி.நாராயணசாமி (99).
ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட ஏலகிரி கிராமத்தில், அவர் தனது மனைவி நாச்சியம்மாளுடன் குடிசை வீட்டில் வசித்துவருகிறார். இவர்களுக்கு 4 ஆண்கள், ஒரு பெண் பிள்ளைகள்.
அகில இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகள், வாரிசுதாரர்கள் சங்கத்தின் திருப்பத்தூர் மாவட்டத் தலைவராகவும் உள்ள இவர், ஓய்வு நேரத்தில் சுதந்திரப் போராட்டம் குறித்து விளக்கிப் பேசுகிறார். அவரிடம் பேசியபோது:
""1942-43-ஆம் ஆண்டில் " வெள்ளையனே வெளியேறு' என்ற இயக்கத்தில் பலரும் பங்கேற்றோம். அதற்காக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டோம்.
சுமார் 4 அடிக்கும் குறைவான உயரம் கொண்டது சிறைச்சாலை வாயில். இரவு தூங்கும்போது தரையில் தண்ணீர் ஊற்றி விடுவார்கள். "சி.ஜே.' என கழியில் பெயரிடப்பட்டிருக்கும். அதாவது சென்ட்ரல் ஜெயில் என்பதற்கு அர்த்தம் ஆகும்.
சுதந்திரம் அடைந்தபோது உடனடி தகவல் பரிமாற்றங்கள் இல்லாததால் விடியற்காலை பொழுதில் மக்களின் ஆரவாரம் மூலம்தான் அறியமுடிந்தது'' என்றார்.