ஆழ்துளைக் கிணறு போடும்போது இடையிடையே உப்புநீரும் வரும். அதாவது 100 அடியில் வருவது உப்புநீராக இருக்கலாம். அதேநேரத்தில் 750 அடியில் நல்ல நீரூற்று இருக்கலாம். அப்படி இருக்கும்போது, நல்ல நீருடன் உப்புநீரும் கலக்கும். ஆழ்துளைக் கிணற்றில் பொதுவாக ஏற்படும் சிக்கல் இது.
இந்தச் சிக்கலுக்குத்தான் எளிய கிராமத்துத் தொழில்நுட்பம், 'களி உருண்டைகள்'. நீண்ட காலமாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வேறொன்றும் இல்லை, களிமண் உருண்டைகள்தான் இவை!
குளத்தில் இருந்து எடுக்கப்படும் கெட்டிக் களிமண்ணை, எலுமிச்சை அளவுக்கு சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி காய வைக்கிறார்கள். போர் போடும்போது பக்கமாகவே உப்பு நீர் வருமானால், குழாயை எடுத்துவிட்டு இந்தக் களி உருண்டைகளை மூட்டைக் கணக்கில் கொட்டி விடுகின்றனர்.
ஓரிரு நாள்களில் களிமண் அந்த உப்பு நீரூற்றை ஒரு கான்கிரீட் தளம் போல கெட்டியாக அடைத்துவிடுகிறது. பிறகு மீண்டும் போர் போடும்போது, களிமண் பகுதியைக் கடந்து கீழே சென்று நல்ல நீரை எடுக்கலாம். இடையில் ஓடும் உப்புநீரூற்று கலக்காது.
இப்படியான அற்புதத் தொழில்நுட்பத்தில் களி உருண்டைகள் தயாரிப்பதை ஒரு தொழிலாகவே பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர் நாயக்கர்பட்டி மக்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சாலையில் இருக்கிறது இந்த ஊர். நூறு குடும்பங்களைக் கொண்ட இந்த ஊரில் பெரும்பாலானவர்கள் களி உருண்டை தயாரிப்பவர்கள்தான். மழை பெய்யும் நாள்கள்களைத் தவிர்த்து அனைத்து நாட்களும் களி உருண்டைகளை உருட்டி காய வைக்கின்றனர்.
ஒரு மூட்டையின் விலை (சிறிய சிப்பம்) ரூ. 30. அருகிலுள்ள குளத்தில் இருந்து களிமண் எடுத்துக் கொள்கின்றனர். எடுத்து வரும் மாட்டு வண்டிச் செலவுதான். அதைத் தாண்டி உழைப்பு மட்டுமே.
பல ஆண்டுகளாக 'களி உருண்டை' தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் கூறியதாவது:
''எங்கள் நாயக்கர்பட்டி கிராமமே 'களி உருண்டை' தயாரிப்பவர்கள்தான். கடற்கரைப் பகுதிகளில் இருந்து லாரியில் வந்து நூற்றுக்கணக்கான மூட்டைகள் வாங்கிச் செல்கிறார்கள். குறிப்பாக, காரைக்கால் பகுதியினர் அதிகம் வருகின்றனர். கடற்கரை ஒட்டிய பகுதியில் சில அடி ஆழத்திலேயே உப்புநீர் வந்துவிடும். அதை அடைப்பதற்கு இந்த 'களி உருண்டைகள்'தான். வேறுவழியே இல்லை.
குடும்பமாகவே வேலை செய்கிறோம். எங்கள் வாரிசுகள் இப்போது பள்ளி, கல்லூரிகளுக்கு படிக்கச் செல்கின்றனர். எளிய தொழில்நுட்பம் என்பதால் பெரிய வருமானம் எதிர்பார்க்க முடிவதில்லை'' என்கிறார்.