காமராஜர் நாகர்கோவில் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றவுடன் தில்லியில் ரயில்வே அமைச்சர் அனுமந்தப்பாவுடன் நடத்திய உரையாடலில், காஷ்மீர்' கன்னியாகுமரியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையை உருவாக்க வேண்டும் என்று அப்போதே வலியுறுத்தி பொருளாதார மேதையாக விளங்கியுள்ளார்.
காமராஜரை பாராட்டும் விதமாக, எஸ்.கே.பாட்டீல் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். அப்போது, ரயில்வே அமைச்சர் அனுமந்தப்பாவுக்கு காமராஜரின் அறிவு நுணுக்கத்தையும் அரசியல் ஆழத்தையும் சோதித்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
உடனே அனுமந்தப்பா ஆங்கிலத்தில், ""மிஸ்டர் காமராஜ். இப்போது நாட்டில் வேலையில்லா பிரச்னை பெருமளவு அதிகரித்துவிட்டது. நாட்டை ஆளும் கட்சியின் தலைவர் என்ற முறையில், இந்தப் பிரச்னையைத் தீர்க்க உங்களிடம் வழி இருக்கிறதா?'' என்றார்.
இதையடுத்து, இருவருக்கும் ஆங்கிலத்தில் நடைபெற்ற உரையாடல் தமிழில்..:
"'ரொம்ப சுலபம்.''
""எப்படி?''
""காஷ்மீரையும் கன்னியாகுமரியையும் இணைக்கும் வகையில், அனைத்து மாநிலங்களையும் சென்றடையும் வகையில் சாலைத் திட்டத்தை அமைக்க வேண்டும். இதனால் நாட்டில் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தப் பொருளையும் பிற பகுதிக்கு எடுத்துச் செல்லும் நிலை உருவாகும். அப்போது பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு, வேலைவாய்ப்பு திண்டாட்டம் எளிதில் தீரும்..''
இதைக் கேட்ட அனுமந்தப்பா இருக்கையைவிட்டு எழுந்து, தனது இரு கைகளையும் நீட்டி காமராஜரின் கைகளைப் பிடித்துகொண்டார். பின்னர், "'மிஸ்டர் காமராஜ்.. நீங்கள் இந்த நாட்டின் பிரதமரானால், நான் உங்களுடைய உதவியாளராக வருவேன்'' என்றார்.
இதைக் கேட்ட அங்கிருந்த தலைவர்கள் ஆரவாரம் செய்தனர்.
காமராஜர் பள்ளிப் படிப்பைச் சரிவர முடிக்காத சாமானியன் தனது அனுவப் படிப்பால் இவ்வளவு அழகாக, எளிமையான சொற்களால் ஆங்கிலத்தை உபயோகப்படுத்திய விதமும், நீண்ட சாலையை அமைத்து பொருளாதாரத்தை மேம்படுத்தலாம் என்ற காமராஜரின் பொருளாதாரச் சிந்தனையும் அங்கிருந்தோரை கவர்ந்தது.
பின்னர் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்களிடம் அனுமந்தப்பா, ""காமராஜ் தமிழ்நாட்டின் பெருமை. நம்முடைய கல்வி அவரது அனுபவ அறிவுக்கு முன்னர் செல்லத்தக்கதல்ல'' என்றார்.
இன்றைக்கு தேசிய நெடுஞ்சாலை என்று இந்தியாவை இணைக்கிறது. இந்தத் திட்டத்தை அன்றைக்கே சொன்னவர் காமராஜர் என்பதுதான் ஆச்சரியம்.
அவரது தேசியக் கனவுதான் தேசிய நெடுஞ்சாலை.