நிலவில் அடுத்தது என்ன?

புவியில் இருந்து 3.84 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள நிலவை ஆய்வு செய்ய இந்தியா முதன்முறையாக அனுப்பி வைத்த சந்திரயான்'1 திட்டத்தின் மூளையாகச் செயல்பட்டவர்தான் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை.
நிலவில் அடுத்தது என்ன?

புவியில் இருந்து 3.84 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள நிலவை ஆய்வு செய்ய இந்தியா முதன்முறையாக அனுப்பி வைத்த சந்திரயான்' 1 திட்டத்தின் மூளையாகச் செயல்பட்டவர்தான் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை.  நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் துளிகள் இருப்பதை உறுதி செய்த அந்த விண்
கலத்தை வடிவமைத்து,  செயல்படுத்தி காட்டியதால் "நிலா மனிதன்' என்று போற்றப்படுபவர்.  அவர்  தொடக்கிவைத்த நெடும்பயணத்தின் அடுத்தகட்டமாக, சந்திரயான்'3 விண்கலத்தின் மூலம் முதல்முறையாக  இந்தியா  நிலவில்  கால் பதித்து  சரித்திரம் படைத்துள்ளது.  அந்தப் பயணத்தின் உந்துகலனாக விளங்கிய மயில்சாமி  அண்ணாதுரையுடன் ஓர் சந்திப்பு:

சந்திரயானுக்கும் தங்களுக்கும் உள்ள நெடிய உறவு குறித்து?

இந்தியாவின் முதல் நிலவுப்பயணமான சந்திரயான் திட்ட வரைவுக் குழுவின் அகில இந்திய அறிவியல் குழுவின் உறுப்பினர் செயலராக  2003'ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டேன்.  2003'ஆம் ஆண்டு  சுதந்திரத் தின விழாவில் சந்திரயான்'1 திட்டத்தை அப்போதைய பிரதமர் வாஜ்பாய்  அறிவித்தார். அதன்பிறகு சந்திரயான்'1 திட்டத் தலைவராக என்னை  அப்போதைய இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர்  நியமித்தார். திட்டக் குழுவை முழுமையாகத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்  எனக்கு அளிக்கப்பட்டது.  

ரூ.341கோடி மதிப்பீட்டில் 2008'ஆம் ஆண்டுக்குள் சந்திரயான்'1 திட்டத்தை செயல்படுத்தத் திட்டமிடப்பட்டது.  அந்த விண்கலத்தில் 11 அறிவியல் ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டன.  

விண்கலத்தில் இருந்து நிலவின் மேற்பரப்பில் விழும் வகையில் 3 அறிவியல் கருவிகளுடன் 35 கிலோ எடை கொண்ட அறிவியல் கருவியும் தயாரிக்கப்பட்டது. 2008'ஆம் ஆண்டு அக்.22'இல் சந்திரயான்'1 விண்கலம் நிலவை நோக்கி பயணித்தது.  இதன் வெற்றியை தொடர்ந்து, அடுத்த ஓராண்டில் சந்திரயான்'2 திட்ட வரைவை தயாரித்து, மத்திய அரசின் ஒப்புதலும் பெறப்பட்டது. ஆனால், திட்டமிடப்படி அத்திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. அதனால், அந்த திட்டமாதிரியில் செவ்வாய்க் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலம் அனுப்பும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு சந்திரயான்'2 திட்டப் பணிகளை ஏறக்குறைய முடித்திருந்தபோது, இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குநராகப் பணி அமர்த்தப்பட்டேன். சந்திரயான்'1,2 விண்கலத் தயாரிப்பில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் 3 ஆண்டுகளில் 30 செயற்கைக்கோள்களைத் தயாரிக்க முடிந்தது. 

தற்போது, சந்திரயான்'3 குறித்து பேச விதைபோட்ட சந்திரயான்'1 பற்றி எல்லோரும் பேசுவது பெருமையாக இருக்கிறது.

சந்திரயான்'3 சாதிக்கப்போவது என்ன?

நிலவின் தரைப்பகுதியில் லேண்டர் கலன் மெதுவாகத் தரையிறங்கியதும், அதில் இருந்து 6 சக்கரங்கள் ரோவர் கலன் இயந்திர மனிதனைபோல வெளியே வந்து, நிலவில் இறங்கி ஆய்வுப் பணியில் ஈடுபடுவது தான் சந்திரயான்'3 திட்டத்தின் மிகப் பெரிய சாதனையாகும். லேண்டர் கலன் தரையிறங்கிய இடத்தில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் இருக்கும் கனிம வளங்களை ரோவர் கலன் கண்டறியும். இதில், பொருத்தப்பட்டுள்ள ஆல்ஃபா பார்ட்டிகல் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர்,  லேசரால் தூண்டப்பட்ட பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் ஆகிய 2 அறிவியல் கருவிகள் இறங்கிய இடத்தின் மண்ணின் தன்மை, தட்ப வெப்பம் உள்ளிட்ட நிலவரங்களை  இரு வாரங்களுக்கு ஆராயும். 

100 கிமீ. தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் உந்துகலன் சுற்றிக் கொண்டிருக்கும். அடுத்த பல ஆண்டுகளுக்கு அந்த உந்துகலன் நிலவை வலம் வரும்.  நிலவில் இருந்து புவியை பார்த்து உயிர்ப்புள்ள கிரகத்தின் சமிக்ஞைகளை சேகரிக்கும். இந்தத் தரவுகளின் அடிப்படையில் விண்வெளியை ஆராயும்போது, சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ள நட்சத்திரக் கோள்களுக்கு நடுவில், எந்தெந்தக் கோள்கள் புவிக்கு ஏற்ற நிலையில் இருக்கிறது என்பதை ஆராய்ந்து உறுதி செய்ய முடியும்.

நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டு பிடித்ததன் விளைவுகள் என்ன?

நிலவில்  தண்ணீர் இருக்கிறது என்கிற நமது கண்டுபிடிப்பை அமெரிக்கா, சீனா அனுப்பிய விண்கலங்களின் ஆய்வும்  உறுதி செய்துள்ளன.  சந்திரயான்'1 விண்கலம் மேற்கொண்ட ஆராய்ச்சியிலும், தண்ணீர் இருப்பது உறுதியாகியுள்ளது.  அரியவகை  மூலப் பொருள்கள் நிலவில் இன்னும் இருக்கிறதா?  என்பதை ஆராயும் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதையும் தாண்டி, நிலவில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கவும், அங்கிருந்து செவ்வாய் கிரகத்துக்குச் செல்லவும், அங்கிருந்து அறிவியல் ரீதியாக விண்வெளியை ஊடுருவி பார்ப்பதற்கும் வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளது. ஆராய்ச்சியில் ஈடுபட ஆர்வம் காட்டும் நாடுகள், நிலவை நோக்கி விண்கலன்களை அனுப்ப தொடங்கியுள்ளன.

இன்னும் எத்தனை சந்திரயான் விண்கலங்கள் அனுப்பப்பட உள்ளன?

தொழில்நுட்பரீதியாக நிலவில் மெதுவாக இறங்க வேண்டும் என்பது முக்கியம். அந்த வகையில், சந்திரயான் 2, 3 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஆராய்ச்சிக்காக நிலவில் இருந்து ஏதாவது கொண்டுவர வேண்டுமானால், அங்கு சில நாள்கள் தங்கியிருக்க வேண்டும். அங்கு சேகரிக்கும் ஆய்வுப் பொருள்களை மீண்டும் புவிக்கு கொண்டுவர முடியுமா? என்பதை உறுதி செய்யும் வகையில் சந்திரயான் 4,5 திட்டங்கள் செயல்படுத்தப்படலாம். அப்படியே பல சந்திரயான் விண்கலன்கள் நிலவுப்பயணத்தை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறேன்.

சந்திரயான் எதிர்கால நோக்கம்?

நிலவில் விண்வெளி ஏவுதளத்தை அமைக்கும் நோக்கில்தான் பயணிக்கிறோம். நிலவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைக்க வேண்டும். அதில் இந்தியா பங்கெடுக்க வேண்டும். அதற்கான இடத்தை அடைவதற்கு சந்திரயான் விண்கலங்கள் நமக்கு தேவை.

நிலவில் இருந்து செயற்கைக்கோள்களைச் செலுத்துவது சாத்தியமா? 

என்றாவது ஒருநாள் நிலவில் இருந்து செயற்கைக்கோள்களைச் செலுத்த முடியும். நிலவில் இருந்து திரும்பி வர வேண்டுமானால், அதுவும் ஒருவகையில் செயற்கைக்கோளைப் போல்தான்.  நிலவில் இருந்து ஒன்றை ஏவுகிறோம். அது புவியை நோக்கி வருகிறது. அதேபோல, நிலவில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கும் விண்கலத்தை அனுப்ப முடியும். அமெரிக்கா அனுப்பிய அப்போலோ கலன் மிகப் பெரியது. அது இரு விஞ்ஞானிகளை ஏற்றிக் கொண்டு நிலவில் இறங்கியபிறகு, மீண்டும் அங்கிருந்து புவிக்கு வந்தது. அதைபோல, நிலவில் இருந்து செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலனை அனுப்பலாம். அந்த வகையில் நிலவில் இருந்து செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்துவது சாத்தியம்தான். இந்தக் கனவு ஒருநாள் நனவாகும்.

மனிதனின் அடுத்த குடியிருப்பாக நிலவு மாறுமா?

புவியின் தென் துருவப் பகுதியான அண்டார்டிகாவில் அதற்காக ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. அதைபோல, நிலவிலும், செவ்வாய்க் கிரகத்திலும் மனிதர்கள் குடியிருந்தால், அதைப் போன்ற ஒன்றை இங்கு உருவாக்க முடியுமா? என்ற ஆராய்ச்சி அண்டார்டிகாவில் நடக்கிறது.  நிலவின் துருவப் பகுதி மிகவும் குளுமையாக இருக்கும். அதற்கான பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. நாளை தேவை ஏற்படும்போது மனிதர்கள் அங்கு குடியேறலாம். வெப்பம் அதிகமாக காணப்படும் வளைகுடா நாடுகளில் நிறைய மக்கள் குடியேறுகிறார்கள். அங்கு கடலில் புதிய தீவுகளைச் செயற்கையாக உருவாக்குகிறார்கள். காரணம், அங்கிருக்கும் எண்ணெய் வளம். அதேபோல சில வளங்கள் இருக்கும்போது, மனிதர்களின் அடுத்த குடியிருப்பாக நிலவு மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

நிலவில் இந்தியர் கால் பதிக்கப்போவது எப்போது?

அடுத்த 10 ஆண்டுகளில் ககன்யான் திட்டம், சந்திரயான்'4  திட்டங்கள் வெற்றி பெறும்போது, இந்தியர் கால் பதிக்கும் திட்டம் நிறைவேறலாம். அமெரிக்கா, ரஷிய கலன்களில் அடுத்த ஆண்டில் இந்தியர்கள் 2 பேர் நிலவுக்கு பயணிக்க இருக்கின்றனர்.  பிற நாடுகளின் கலன்களிலும் இந்தியர் நிலவில் கால் பதிக்கலாம். இரண்டில் ஏதாவது ஒரு முறையில் இந்தியர் நிலவில் கால்பதிப்பது உறுதி.  சந்திரயான் விண்கலத்தைப்போல, அந்த இந்தியர்களும் நிலவு ஆராய்ச்சியில் முக்கிய பங்காற்றுவார்கள்.

மங்கள்யான்'2 பற்றி?

தொழில்நுட்பரீதியாக செவ்வாய்க் கிரகத்தை சென்றடைய முடியும் என்பதை உறுதி செய்யவே மங்கள்யான்'1 விண்கலம் அனுப்பப்பட்டது.  அதில் பெரிய அறிவியல் கருவிகள் கொண்டுபோகவில்லை. கடந்தமுறையை போலவே புவியில் இருந்து நீள்வட்டப் பாதையில் பயணித்து செவ்வாய்க் கிரகத்தில் இருந்து 200 கி.மீ. அல்லது 300 கி.மீ. தூரத்தில் இருந்து செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்வதா? அல்லது செவ்வாய் கிரகத்தின் தரையில் இறங்கி ஆய்வு செய்வதா? என்பது குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் முடிவில், மங்கள்யான்'2 திட்டம் உருவாகலாம்.

சூரியனை பற்றிய ஆராய்ச்சி விண்கலம் என்ன ஆனது?

ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளைப்போல் புவியில் இருந்து 600 கி.மீ. உயரத்தில் இருந்து, சூரியனை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சந்திரயான்1 வெற்றிக்குப் பின்னர் அந்தத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. புவிக்கும் சூரியனுக்கும் இடையில் ஈர்ப்பு விசைகள் சரிசமமாக இருக்கக் கூடிய லெக்ராஞ்சியப் புள்ளி1'ஐ சுற்றி போகக் கூடிய கலனாக அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் தயாராக உள்ளதால்,  எந்த நேரத்திலும் விண்ணுக்கு அனுப்பப்படலாம்.

தமிழ்நாட்டில் விண்வெளி ஆராய்ச்சியின் நிலை? 

தமிழ்நாட்டில் விண்வெளி ஆராய்ச்சிகள் பற்றிய பெரிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்குழந்தைகளே அதற்கான முன்னெடுப்புகளில் ஈடுபட்டுள்ளனர். அடுத்தகட்ட முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு எடுத்து செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. 

குலசேகரப்பட்டினத்தில் உள்ள இஸ்ரோ மையத்தைச் சுற்றி விண்வெளி துறை சார்ந்த தொழில் நிறுவனங்களை உருவாக்க நல்ல வாய்ப்புள்ளது. குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்கும்போது, சிறு ஏவுகலன் (ராக்கெட்), சிறு செயற்கைக்கோள்களுக்குத் தேவையான பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களை அதை சுற்றி அமைக்கலாம். எதிர்காலத்தில் சிறு ஏவுகலன், சிறுசெயற்கைக்கோள்களுக்கான தேவை அதிகரிக்க இருக்கிறது. 

நாளை ஏவுவதற்கு இன்றைக்கு செயற்கைக்கோளைத் தயாரிக்கும் அளவுக்கு வளர்ச்சி அமைந்திருக்கும்.  அப்படிப்பட்ட சூழல் உருவாகும். அதை நோக்கி, குலசேகரப்பட்டினத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்தினால், அது தொழில், வேலைவாய்ப்புகளையும், ஆராய்ச்சி வாய்ப்புகளையும் அதிகரிக்கும். விண்வெளித் துறையில் தமிழ்நாடு அதிகஅளவில் பங்காற்றுவதற்கான வாய்ப்புகள் ஏராளம் உள்ளன.  இந்தத் திசையில் அரசு சிந்தித்து செயலாற்ற வேண்டும். 

விண்வெளித் துறையில் தமிழ்நாடு அரசு கால் பதிக்க வாய்ப்புள்ளதா? 

புதிய விண்வெளிக் கொள்கையில், விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட  மத்திய அரசு அனுமதி அளித்தது.  இஸ்ரோ இயக்குநராக நான் இருந்தபோது, செயற்கைக்கோள்களில் பல பகுதிகளைத் தயாரிக்கும் வாய்ப்பை தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்திருந்தோம்.  இதுவரை 67 செயற்கைக்கோள்களைத் தனியார் நிறுவனங்கள் அனுப்பியுள்ளன. பி.எஸ். எல்.வி. ராக்கெட்டை தயாரிக்கும் வாய்ப்பும் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தாண்டி, 7 தொலைஉணர் செயற்கைக்கோள்கள் தயாரிக்கும் வாய்ப்பையும் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய விண்வெளித் துறை வழங்கியுள்ளது. அதை தனியார் நிறுவனங்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளும் என்று கருதுகிறேன். இதையும் தாண்டி, சிறிய ரக ஏவுகலன்களை ஓய்வு பெற்ற விஞ்ஞானிகளும், இளைஞர்களும் இணைந்து தயாரிக்கும் ஏவுகலன்களின் முதல்கட்ட வெற்றியை என்னால் பார்க்க முடிகிறது.  இது சரியாக நடக்கும்பட்சத்தில், குலசேகரப்பட்டினத்தில் ஏராளமான வளர்ச்சிகள் தென்படும்.  விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்கள் பங்காற்றும்போது குலசேகரப்பட்டினம் நல்ல தளமாக மாறும்.

 தனியார் நிறுவனங்கள் செய்ய காத்திருக்கும் சாதனைகள்?

இஸ்ரோ இதுவரை செய்து வந்த தொலைதொடர்பு, தொலைஉணர், வானிலை, புவிசார் வழிகாட்டி செயற்கைக்கோள்கள் போன்றவற்றின் ஆய்வுப்பணிகள் காலாவதியான பிறகு, அவற்றை மீண்டும் விண்ணில் செலுத்த வேண்டியிருக்கும்.  அப்போது, இந்தச் செயற்கைக்கோள்களைத் திரும்ப, திரும்ப இஸ்ரோ தயாரிக்காமல், அடுத்தகட்ட ஆராய்ச்சிப்பணிகளில் ஈடுபடுவதற்கு வசதியாக, அந்த செயற்கைக்கோள்களை தயாரிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இஸ்ரோவின் உள்கட்டமைப்பு வசதிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 

இந்தியாவுக்கு அதிக அளவில் செயற்கைக்கோள்களின் தேவை உள்ளது. இந்தத் தேவைகளை தனியார் நிறுவனங்களால் நிறைவு செய்ய முடியும். வெளிநாட்டு முதலீடுகளும் வர வாய்ப்புள்ளது. கார் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு, இந்தியாவின் தேவைகளை நிறைவு செய்து, அது வெளிநாட்டின் கார் தேவையை பூர்த்தி செய்கிறதோ, அதைபோல, இந்திய விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்கள் முன்னெடுக்க முடியும். அப்போது  இஸ்ரோவில் உள்ள 16 ஆயிரம் விஞ்ஞானிகள் அடுத்தக்கட்ட ஆராய்ச்சிக்கான முன்னெடுப்புகளில் ஈடுபட முடியும். பெரிய கலன்களைச் செய்யலாம். அடுத்தகட்ட நிலவுப் பயணங்களில் சிறப்பாக ஈடுபடலாம். 

செவ்வாய்க் கிரக ஆராய்ச்சிக்கான கலன்களை அனுப்பலாம். தனியார் நிறுவனங்கள் ஏவுகலன்களையும், செயற்கைக்கோள்களையும் செய்ய முடியும். 

கைப்பேசிகளில் உள்ள ஜிபிஎஸ் முறை "நாவிக்' என்ற செயற்கைக்கோளால் சாத்தியப்படுகிறது. இதற்கு தனியாக கைப்பேசி செயலியை கொண்டுவர புதிய செயற்கைக்கோள்களை தனியார் நிறுவனங்கள் விண்ணில் செலுத்தலாம். செயற்கைக்கோளின் தரவுகளைப் பயன்படுத்தி பருவநிலை மாற்றம், வேளாண்மை, மீன்பிடிப்பு, மருத்துவம், பாதுகாப்பு, ரயில்வே, விமானத் துறைகளில் பல்வேறு மாற்றங்களை தனியார் நிறுவனங்கள் உருவாக்கலாம்.

அடுத்தக்கட்ட விண்வெளிக் கனவு?

எனது பணிக்காலத்தில் ஐ.நா. சபையில் நடக்கும் விண்வெளி சார்ந்த மாநாடுகளில் 3 ஆண்டுகள் கலந்துகொண்டேன். அப்போது, அடுத்தகட்ட சர்வதேச ஆய்வு மையம், புவிக்கு பக்கத்தில் இல்லாமல், நிலவில் அமைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தேன்.  அதுதொடர்பான கலந்தாய்வுகள் நடந்தன. இதில் ஒரு விண்வெளி அமைப்பு ஆர்வமாக இருந்தது.  ஆனால், அந்த அமைப்பு பிரிந்து, அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் தலைமையில் தனித்தனியாக இயங்கும் அமைப்பாகச் செயல்பட்டு வருகின்றன. ஆனால், எல்லா நாடுகளும் இணைந்து பங்காற்றும் பொதுவான புதிய அமைப்பை உருவாக்கி, உண்மையான சர்வதேச விண்வெளி மையத்தை இந்தியா அமைக்க வேண்டும். 

தற்போது "மீண்டும் நிலவுப் பயணம்' என்ற போட்டி தொடங்கியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா நாடுகளின் அமைப்புகளுக்கு இடையே பொதுவான அமைப்பை உருவாக்கி, சர்வதேச ஆய்வு மையத்தை இந்தியா அமைக்க வேண்டும். சந்திரயான்1,2,3 திட்டங்கள் மூலம் நிலவில் தண்ணீர் இருப்பதையும், நிலவில் மெதுவாக தரையிறங்க முடியும் என்பதையும், நிலவின் பரப்பில் 6 சக்கர வாகனத்தை இயக்க முடியும் என்பதையும் நிரூபித்து,  நிலவின் தென் துருவத்தில் தேசியக் கொடியை பதித்த முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. 

உலகத்துக்குத் தேவையான எரிபொருளை நிலவில் இருந்து கொண்டுவரும்போது, விண்வெளியில் எல்லைகளைப் பிரித்து கொண்டு சண்டையிட்டுக் கொண்டால், அது பெரும் ஆபத்தாக முடியும்.  அப்படி இல்லாமல், உலகுக்கு முன்னுதாரணமாக, அமைதிக்கான அடித்தளமாக சர்வதேச விண்வெளி மையத்தை அமைக்க இந்தியா முனைப்பாகச் செயலாற்ற வேண்டும்.  பொதுவான தலைமைப் பொறுப்பையும் ஏற்கலாம். இஸ்ரோவில் 40 ஆண்டுகள் பணியாற்றியவன்,  நிலவுப் பயணத்தில் குறிப்பிடத்தக்கப் பங்காற்றியவன் என்ற முறையில் இந்த யோசனையை முன்வைக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com