குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தும் நச்சுப் பாம்புகளை லாகவமாகப் பிடித்து, வனப் பகுதியில் விடுகிறார் முப்பத்து ஆறு வயதான "சினேக் மதன்' என்ற மதன்குமார்.
சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடி அண்ணா நகரைச் சேர்ந்த இவர், கட்டடங்களுக்கு பெயின்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்து வனப் பகுதியில் விட்டுள்ள அவரிடம் பேசியபோது:
'சிறு வயதிலிருந்தே பாம்புகளைக் கண்டால் எனக்கு பயம் இல்லை. தொலைக்காட்சிகளில் பாம்புகளை லாவகமாகப் பிடிக்கும் காட்சிகளைப் பார்த்து, நானே பயிற்சி பெற்றேன்.
நச்சுள்ள, நச்சற்ற நூற்றுக்கணக்கான பாம்புகளைப் பார்த்து, இனம் கண்டறியவும் பழகிக் கொண்டேன். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, பயமின்றி பாம்புகளைப் பிடித்து வருகிறேன். எங்காவது பாம்புகள் இருந்தால், பொதுமக்கள் என்னை கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்கின்றனர். உடனே நான் அந்த இடத்துக்குச் சென்று, எந்த வகையான பாம்பாக இருந்தாலும் லாவகமாகப் பிடித்து வனப்பகுதியில் விட்டு விடுவேன்.
மக்களே முன்வந்து சன்மானமாக கொடுக்கும் சிறு தொகையைப் பெறுவேன். இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பாம்புகளைப் பிடித்துள்ளேன். பலமுறை என்னை பாம்புகள் கடித்துள்ளன. ஆனால் பாம்பு விஷம் என்னை பெரிதாகப் பாதிக்கவில்லை. இருப்பினும், மிகுந்த கவனத்துடன்தான் பாம்புகளைப் பிடித்து வருகிறேன்.
பாம்புகளை இனம் கண்டறியவும், பிடிப்பதற்கும் பலருக்கும் பயிற்சி அளித்து வருகிறேன். எனக்கு வனத் துறை ஆதரவு அளித்தால், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களுக்குப் பயிற்சி அளிக்க தயாராக உள்ளேன்'' என்றார்.