தமிழ் சினிமாவில் கோலோச்சி, நம் நினைவுகளில் இருந்து மறைந்து போன, பல முன்னாள் நடனக் கலைஞர்களை நினைவு கூறும் வகையிலும், அவர்களை கெளரவிக்கும் வகையிலும் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. "டான்ஸ் டான் 2023' என்ற பெயரில் வரும் 30-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வை நடன இயக்குநர் ஸ்ரீதர் முன்னின்று ஏற்பாடு செய்கிறார். இது குறித்து அவர் பேசும் போது...
பாடலும் ஆடலும் இல்லாமல் இந்திய சினிமா இல்லை. இங்கு சினிமா உருவானதிலிருந்தே ஆடல், பாடல் சினிமாவின் ஒரு அங்கமாக, சினிமாவிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடனக் கலையை பயிற்றுவிக்கும் நடனக் கலைஞர்களின் பணி அளப்பரியது. இத்தனை புகழ் மிக்க நடனக் கலையை ஆரம்ப காலத்தில் பயிற்றுவித்த பல புகழ்மிகு நடனக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் வரலாற்றில் இல்லை. 1950 - களில் துவங்கி 2023 வரையிலும் பல புகழ்பெற்ற நடனக் கலைஞர்கள் தமிழ்த்
திரையுலகில் பணியாற்றி வந்துள்ளனர். அவர்களைப் பற்றி வரலாற்றில் பதிவு செய்து, அவர்களின் நினைவை போற்றும் வகையிலும் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற நடன கலைஞர்களும் இவ்விழாவில் கெளரவிக்கப்படவுள்ளனர். சென்னை காமராஜர் அரங்கில் நடக்கவுள்ள இவ்விழாவில், தமிழ் சினிமாவின் முன்னணி நடன கலைஞர்களுடன், தமிழ்த்திரைத்துறையின் பல முன்னணி இயக்குநர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர்'' என்றார்.