அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜன. 22-இல் நடைபெறுகிறது. இங்கு வைக்கப்படும் ராமர் சிலையை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிற்பிகள் முகம்மது ஜமாலுதீன், அவரது மகன் பிட்டு வடிவமைக்கின்றனர் என்ற செய்தி வைரலாகிவருகிறது.
இவர்களது சிலை வடிக்கும் திறமையைக் கண்டு கோயில் பொறுப்பாளர்கள் ராமர் சிலையைச் செய்யும் பொறுப்பை வழங்கினர்.
பைபர் இழைகளால் சிலைகளை வடிவமைப்பதில் இருவரும் திறமை பெற்றவர்கள். சிலை எடை குறைவாக இருப்பதுடன், வெயில், மழை, குளிரால் சிலையின் பொலிவு குறையாது.
கர்ப்பக் கிரகத்தில் வைக்கப்படும் சிலை, பொதுவாக கிரானைட் பாறையில் செதுக்குவார்கள். வட இந்தியாவில் கடவுள் சிலைகளைப் பளிங்கு பாறையில் உருவாக்குவார்கள். பாரம்பரிய மரபை மீறி, பைபர் இழைகளால் செய்து அதை கர்ப்பகிரகத்தில் வைத்து பூஜை செய்வார்களா என்ற சந்தேகம் எழும்.
இதுகுறித்து கோயில் தரப்பில் கூறுகையில், ""பைபர் இழைகளால் செய்யப்படும் சிலையையும் சேர்த்து ஆள் உயர ராமர் சிலைகள் மொத்தம் நான்கு சிலைகள் செய்யப்படுகின்றன. இரண்டு சிலைகள் கர்நாடகத்தில் கிரானைட் பாறைகளில் பிரபல சிற்பிகளான கணேஷ் பட், அருண் யோகிராஜ் செதுக்குகின்றனர். மூன்றாவது சிலை ஜெய்ப்பூரில் மைக்ரான் பளிங்கு பாறையில் நாராயண் பாண்டே உருவாக்கியிருக்கிறார். பளிங்கு பாறையில் உருவாகும் ராமர் சிலையின். ஒரு கையில் வில்லையும், இன்னொரு கையில் அம்பையும் ஏந்தி நிற்பார்.
கர்நாடகத்தில் செய்யப்படும் இரண்டு சிலைகளில் ஒன்று சிலை கர்ப்பக் கிரகத்தில் வைத்து வழிபாடுகள் நடத்தப்படும்.
பைபர் இழைகளால் செய்யப்பட்ட சிலை, இதர இரண்டு சிலைகள் ஆக மூன்று சிலைகள் கோயில் வளாகத்தில் வைக்கப்படும்'' என்கின்றனர்.