"இம்சை அரசன் 23-ம் புலிகேசி', அறை எண் 305-இல் கடவுள் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் சிம்புதேவன். சென்ற வருடம் வெளிவந்த இவரது படமான "கசடதபற' சிறந்த திரைக்கதைக்கான பல விருதுகளை பெற்றது. தற்போது இவர் இயக்கி வரும் படம் "போட்'. மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமாரின் தயாரிப்பில் உருவாகி வருகிறது இப்படம். முழுக்க முழுக்க கடலில் நடக்கும் கதையாக இதன் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. யோகி பாபு, கெளரி ஜி கிஷன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது.
1940-ஆம் ஆண்டின் பின்னணியில் கதை நடைபெறுகிறது. சென்னை மீது ஜப்பான் குண்டு வீசிய போது உயிருக்கு பயந்து 10 பேர் ஒரு சின்ன படகில் கடலுக்குள் தப்பிக்கிறார்கள். எதிர்பாராத விதமாக நடுக்கடலில் அந்த படகு நகர முடியாமல் நின்று விடுகிறது. அந்த பரபரப்பான சமயத்தில் படகு ஓட்டையாகி கொஞ்சம் கொஞ்சமாக மூழ்க, ஒரு பெரிய சுறாவும் படகை சுற்றி வர, படகில் உள்ளவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதே கதை.""எதார்த்தம் என்பது கற்பனையை காட்டிலும் விநோதமானது. அதிசயதக்கது. அது மாதிரியான ஒரு சம்பவம் இது. அப்படி எழுத ஆரம்பித்ததுதான் இதன் ஆரம்ப புள்ளி. பிளாக் காமெடியாக எழுத வேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன்.
ஆனால், கதை ஒரு கட்டத்துக்குப் பின் தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் என்பார்கள். அப்படி அதன் அம்சங்களை இந்தக் கதை அதுவாகவே தேடிக் கொண்டது. அப்படி ஆரம்பமான ஒரு பயணம் இது'' என்றார் சிம்புதேவன்.
முழுக்க முழுக்க கடலில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் த்ரில்லர், ஆக்ஷன், பொலிட்டிக்கல் காமெடியாக இருக்கும். ஜிப்ரான் இசையமைத்துள்ள "போட்' திரைப்படத்தின் ஒளிப்பதிவை மாதேஷ் மாணிக்கம் கையாண்டுள்ளார். படத்தொகுப்புக்கு தினேஷும் தயாரிப்பு வடிவமைப்புக்கு டி சந்தானமும் பொறுப்பேற்றுள்ளனர். "போட்' திரைப்படம் வரும் பிப்ரவரியில் ஐந்து மொழிகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.