நாட்டிலேயே ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் செயல்படும் தபால் நிலையம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ளது.
சபரிமலை சந்நிதானத்தில் மாளிகைபுரம் கோயில் அருகே செயல்படும் இந்தத் தபால் நிலையம் 1963- ஆம் ஆண்டு மண்டல பூஜையின்போது நவம்பர் 17-இல் திறக்கப்பட்டது. மண்டலம், மகர விளக்கு காலங்களில் மட்டும் செயல்படுகிறது.
தபால் அலுவலகங்களில் ஒரே மாதிரியான முத்திரைத்தாள் பயன்படுத்தப்படும். ஆனால் சபரிமலைக்கு தனி முத்திரை வழங்கப்பட்டுள்ளது. இங்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் முத்திரையில் சபரிமலையின் பதினெட்டாம்படி, ஐயப்பன் சிலை உலோகத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த உலோக அஞ்சல் முத்திரை 1974- ஆம் ஆண்டு முதல் சந்நிதானம் தபால் நிலையத்தில் அமலுக்கு வந்தது . இதுபோன்று உலகத்தில் வேறு எங்கும் பயன்படுத்துவதில்லை.
அதேபோல், "68 97 13' என்ற தனி பின்கோடு எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் கடிதங்கள் ஒரே ஒருவர் பெயருக்குதான் வருகின்றன. அதாவது ஐயப்பன் பெயரில் சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை தரிசிக்க முடியாதவர்கள், கடிதங்கள் வாயிலாக ஐயப்பனிடம் முறையிடுகின்றனர். காணிக்கைகளை மணியார்டர் மூலம் அனுப்புகின்றனர்.
இந்தத் தபால்களும் மணியார்டர்களும் ஐயப்பன் சந்நிதியில் வைத்து பூஜிக்கப்பட்டு, தபால் நிலையத்தில் ஒப்படைக்கப்படும். மேலும், சபரிமலை பிரசாதங்கள் இந்தத் தபால் நிலையம் மூலம் அனுப்பப்படுகிறது.
சபரிமலை தபால் நிலைய முத்திரை தங்கள் வீடு தேடி வருவதை புனிதமாகவே பக்தர்கள் கருதுகின்றனர். ஐயப்பன் முத்திரையுடன் கூடிய அஞ்சல் அட்டைகள், இன்லேன்ட் லெட்டர்கள் ஆகியவற்றையும் சபரிமலை யாத்திரை நினைவாக பக்தர்கள் வாங்கி செல்கின்றனர்.
இங்கு "இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி' வசதியும் உள்ளது. மகர விளக்கு பூஜைக்கு பிறகு இந்தத் தபால் நிலையம் மூடப்பட்டுவிடும், முத்திரைகள் பம்பாவில் தனி அறையில் வைத்து பூட்டி பத்திரமாகப் பாதுகாக்கப்படும்.