சமூகப் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து கவிதைகள் புனைவேன்

"சமூகப் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து கவிதைகள் புனைவேன்'' என்று சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இளம் எழுத்தாளர் ப. காளிமுத்து கூறியிருக்கிறார்.
சமூகப் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து கவிதைகள் புனைவேன்


""சமூகப் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து கவிதைகள் புனைவேன்'' என்று சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இளம் எழுத்தாளர் ப. காளிமுத்து கூறியிருக்கிறார்.

இலக்கிய உலகில் உயரிய விருதாக கருதப்படும் சாகித்ய அகாதெமி விருது இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு அளிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர்களுக்கு "யுவ புரஸ்கார்' விருதையும் இந்திய பிராந்திய மொழிப் படைப்புகளுக்கு சாகித்ய அகாதெமி வழங்கி வருகிறது.

2022-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமியின் "யுவ புரஸ்கார் விருது' தில்லியில் நடைபெற்ற விழாவொன்றில் வழங்கப்பட்டது.

தமிழ்மொழிப் பிரிவில் "தனித்திருக்கும் 
அரளிகளின் மதியம்' என்ற கவிதை நூலுக்கு 
ப. காளிமுத்து, யுவ புரஸ்கார் விருதைப் பெற்றார். 

பொள்ளாச்சியில் உள்ள என்ஜிஎம் கல்லூரியில் பிஎஸ்சி கணினி அறிவியல் பட்டப்படிப்பை முடித்துள்ள காளிமுத்து,  தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த விருது குறித்து அவர் கூறியதாவது:

""பொள்ளாச்சி அருகே உள்ள பில்சின்னம்பாளையம் எனது ஊராகும்.  எனது தந்தை ஒரு மாற்றுத்திறனாளி. தாய் ஒரு விவசாயத் தொழிலாளி.  பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது,  எனக்குள் கவிதை ஆர்வம் துளிர்விட்டது. மனதில் தோன்றியதை காகிதங்களிலும், நாட்குறிப்பிலும் கவிதையாக எழுதி வைப்பேன். அதைத் தொடர்ந்து வந்த சில ஆண்டுகளில் எனது கவிதை ஆர்வம் மேலும் பெருகியது. 

அச்சமயத்தில், பொள்ளாச்சியில் "புன்னகை' பத்திரிகையை நடத்தி வரும் எழுத்தாளர் அம்சபிரியாவைச் சந்தித்தேன். அவர் எனது கவிதைகளைப் படித்துவிட்டு தொடர்ந்து எழுதுமாறு என்னை ஊக்குவித்தார். 2014-ஆம் ஆண்டிலிருந்து வாசிப்பை தீவிரப்படுத்தினேன். எழுத்தாளர்கள் அம்சபிரியா, கல்யாண்ஜி, நேசமித்திரன் உள்ளிட்ட சிலரின் எழுத்துகளை ஆழமாக வாசிக்க ஆரம்பித்தேன். அது என்னுடைய கவிதை வடிவத்தை மேலும் மெருகூட்ட 
உதவியது. 

2012 முதல் நான் அவ்வப்போது தொடர்ந்து எழுதிய வைத்திருந்த 84 கவிதைகள் அடங்கிய தொகுப்பை "தனித்திருக்கும் அரளிகளின் மதியம்' எனும் தலைப்பில் இருவாச்சி பதிப்பகம் மூலம் 2019-இல் நூலாக வெளியிட்டேன். இதன் பிறகு, சாகித்ய அகாதெமிக்கு எனது கவிதை நூலை அனுப்பி வைத்தேன். அது உரிய நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு,  விருது கிடைத்திருக்கிறது.  இது எனக்கு மிகவும் ஊக்குவிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

தனிமையில் இருக்கும் பழக்கம் இருந்ததால் எழுத்தை துணையாகக் கொண்டேன். கவிதை எனக்கு துணையாகவும், கவிதைக்கு நான் துணையாகவும் மாறினேன். தனி மனிதர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகள், சவால்கள், யதார்த்த வாழ்வு, மனித நேயம், சமூகப் பிரச்னைகள் என்ன பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய நவீன கவிதைகளாகும். எனது கவிதையின் தலைப்பு கூட யதார்த்தம்தான். கிராமங்களில் பலரும் வேலைக்கு சென்று விட, தனியாக இருக்கும் முதியவர்களும், நோயாளிகளும் மரத்தடியில் அமர்ந்து பேசிப் பகல் பொழுதை கழிப்பதுண்டு. இதைக் குறியீடாகக் கொண்டுதான், "தனித்திருக்கும் அரளிகளின் மதியம்' என்று நான் பெயரிட்டேன். 

எனது கவிதை நூலுக்கு முதல் முறையாக தமிழ்நாடு கலை இலக்கிய மேடை விருது வழங்கி சிறப்பித்தது.  தற்போது சாகித்ய அகாதெமி விருது கிடைத்திருக்கிறது. 

இதைத் தொடர்ந்து எனது அடுத்த கவிதைத் தொகுப்பை இன்னும் சில மாதங்களில் வெளியிடுவதற்குத் திட்டமிட்டுள்ளேன். சமூக அவலங்களையும், சமகால பிரச்னைகளையும் வெளிப்படுத்தும் வகையில்,  தொடர்ந்து கவிதை
களாகப் புனைவேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com