""மரங்கள் இன்றி மனிதர்களோ, உயிரினங்களோ இல்லை; மரக்கன்றுகளை நடும் பணியை வாழ்நாள் முழுவதும் செய்வேன்'' என்கிறார் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட ஆற்காடு அருகேயுள்ள வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன்.
முப்பத்து ஐந்து வயதான இவர், நெசவுத் தொழிலாளி. இவரது பெற்றோர் வேலாயுதம் செல்வி ஆகியோரும் நெசவுத் தொழிலாளர்கள். இவருக்கு அமுதா என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் "பசுமை முதன்மையாளர் விருது', வேல்ஸ் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம் உள்பட பல்வேறு விருதுகள், பட்டங்கள், பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளார்.
அவரிடம் பேசியபோது:
""நான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். பின்னர், இடைநின்ற கல்வியைத் தொடர, எட்டாம் வகுப்புத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். நெசவுத் தொழில் செய்துவருகிறேன். ஓய்வு நேரத்தில், என்னால் இயன்ற சமூகச் சேவை பணிகளை செய்துவருகிறேன்.
2017ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கடும் வறட்சி நிலவியது. அப்போது, இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் நூல்கள் படித்தும், வீடியோக்களைக் கேட்டும் மரங்களின் அவசியத்தை உணர்ந்தேன்.அதே ஆண்டு ஜூன் 5இல் உலகச் சுற்றுச்சூழல் தினத்தன்று, "நம்மாழ்வார் இயற்கை குழு' என்ற பெயரில், பள்ளி மாணவர்களை அழைத்து மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடர்ந்தேன்.
அழிந்து வரும் நாட்டு மரங்கலான இலுப்பை, நாவல், புங்கன், வேம்பு, நீர்மருது, மகிழம், ஆலம், அரசம், பூவரசு, புளியன் உள்ளிட்ட மரக்கன்றுகளை 4,705 எண்ணிக்கையில் நடவு செய்துள்ளேன்.
138 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலையில் 1.98 லட்சம் விதைபந்துகள், விதைகளை நடவு செய்துள்ளேன். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பனை மரக்கன்றுகளையும் நடவு செய்துள்ளேன். பொது நிகழ்ச்சிகளில் மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு அளித்தும்வருகிறேன். மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஆயிரக்கணக்கான பனை விதைகளைச் சேகரித்து அனுப்பி உள்ளேன்.
சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை எனது வாழ்நாள் முழுவதும் தொடருவேன்'' என்றார்.
படம்: ஜா.புகழேந்தி