லைகா நிறுவனத்தின் 24-ஆவது தயாரிப்பாக உருவாகி வரும் படத்துக்கு "திருவின் குரல்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஹரிஷ் பிரபு. இயக்குநர் அருண்குமாரிடம் "பண்ணையாரும் பத்மினியும்', "சேதுபதி' ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இவர். படத்தின் தலைப்பில் "திருவின் குரல்' எனக் குறிப்பிடுவது போல கதாநாயகனது கதாபாத்திரம் பேச்சு குறைபாடு இருப்பவராக சித்தரிக்கப்பட்டுள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான அழகான மற்றும் உணர்ச்சிபூர்வமான பிணைப்பாக படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அருள்நிதி மகனாக நடிக்க, இயக்குநரான பாரதிராஜா அவரது தந்தையாக நடிக்கிறார். ஆத்மிகா கதாநாயகியாக நடிக்கிறார். சுபத்ரா ராபர்ட், மோனேகா சிவா, அúஷ்ரப், ஜீவா, ஹரிஷ் சோமசுந்தரம், மகேந்திரன், முல்லையரிசி உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்கின்றனர்.
படத்தின் மொத்த படப்பிடிப்பும் 42 நாள்களில் முடிவடைந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களிலும், சென்னையில், நகர்ப்புற பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது. சாம் சி.எஸ். இசையமைக்கிறார். ஒளிப்பதிவு இயக்குநராக சின்டோ போடுதாஸ் பணியாற்றுகிறார். படத்தொகுப்பை கணேஷ் சிவா கவனிக்கிறார். கலை இயக்குநராக தியாகராஜன் பணியாற்றுகிறார். பாடல் வரிகளை உமாதேவி, கருப்பன் இருவரும் எழுதுகின்றனர்.