உலகில் எண்ணற்ற மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு, நூற்றுக்கணக்கானோர் உரையை எழுதியுள்ளனர். ஆனால், திருக்குறளை இசை வடிவில் வெளிக்கொணர்ந்தது சொற்பமே! இந்த நிலையில் திருக்குறளை ஒலி வடிவில் உருவாக்கியுள்ளார் ஒன்பதாம் வகுப்பு மாணவர் தீரஜ்.
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட நித்திரவிளையைச் சேர்ந்த இவர், தனியார் பள்ளியில் பயின்றுவருகிறார். பதினான்கு வயதானவர். இவர் தினமும் 10 குறள்கள் என்ற கணக்கில் 133 நாள்களில் 1, 330 திருக்குறளை இசையமைத்து பாடி, சமூக வலைதளங்களில் பரப்புரை செய்துள்ளார்.
இதுகுறித்து தீரஜ் கூறியதாவது:
""கரோனா காலத்தில், பள்ளிகள் மூடப்பட்டபோது, வீட்டிலிருந்தபடியே தினமும் பாடி பதிவிட்ட கரோனா விழிப்புணர்வு பாடல்கள் மூலம் வெளியுலகுக்கு தெரிய ஆரம்பித்தேன். இதற்காக, கரூர் சங்கமம் அறக்கட்டளை சார்பில் "சிறந்த கரோனா விழிப்புணர்வு சாதனையாளர்' எனும் விருது, திண்டுக்கல் பசுமைவாசல் அறக்கட்டளையின் "சிறந்த சமூக விழிப்புணர்வு ஆர்வலர்' எனும் விருது, "திருப்பூர் தேசம் காப்போம் அறக்கட்டளை' சார்பில் "கரோனா தடுப்பு விழிப்புணர்வாளர்' விருது, பண்ருட்டி செந்தமிழ் சங்கம் அனைத்துலக பொருங்கு தமிழ்ப் பேரவையின் "அறிவுச் சுடர்' விருது உள்பட 150 அமைப்புகளின் விருதுகள், சான்றிதழ்களைப் பெற்றேன்.
தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை, மாவட்ட கலை மன்றம் சார்பில் சிறந்த குரல் இசை மாணவராகத் தேர்வு செய்யப்பட்டு, 2022 ஆம் ஆண்டு செப். 6 ஆம் தேதி அப்போதைய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த்திடம் "கலை இளமணி' எனும் விருதும் பெற்றேன்.
எனது சாதனைப் பயணத்தை விரிவுபடுத்த எண்ணிய வேளையில், கண் முன்னே வந்து நின்றது திருக்குறள். ஈரடியில் வாழ்க்கையின் அனைத்து நிலைகளையும் எடுத்தியம்பிய இந்த நூலைப் படிக்க படிக்க வியப்பே ஏற்பட்டது.
இசை வடிவில் கொடுத்தால் அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் திருக்குறள் எளிதில் சென்று சேரும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதற்கு எனது தந்தை ஜோணி அமிர்த ஜோஸின் ஆதரவும் இருந்தது. இதைத் தொடர்ந்து திருக்குறளுக்கு இசை வடிவம் கொடுத்து, பாடி வலைதளங்களில் வெளியிட்டேன்.
பலத்த வரவேற்பை பெற்றுத் தந்ததுடன், "ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்கார்ட்ஸ்' அமைப்பு இந்த சாதனையை பதிவு செய்து அங்கீகரித்துள்ளது' என்றார்.