"தமிழை வளர்க்க வேண்டும்; திருக்குறளைப் போற்ற வேண்டும்' என்ற நோக்கத்தில், "தமிழ்மகள்' என்ற முகநூல் கணக்கு வாயிலாக பேச்சு, தினம் ஓரு திருக்குறளும்-அதன் விளக்கமும் காணொலியை பள்ளி மாணவி ச.லத்திகாஸ்ரீ என்பவர் வெளியிட்டு வருகிறார். இவர் பெரம்பலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட கிருஷ்ணாபுரத்தில் வசிக்கிறார். அவருடன்ஒரு சந்திப்பு:
உங்களைப் பற்றி..?
எனது மூன்றாவது வயதில் 1330 திருக்குறள்களை ஒப்புவித்தேன், எட்டாம் வயதில் கீ போர்டு வாசித்தல், ஒவியம் வரைதல், பாடலும் கதையும் சொல்லுதல் என்று சாதனைகளைப் படைத்தேன்.
அப்துல் கலாம் அறக்கட்டளையின் சார்பில் "சிறந்த மனித நேய விருது, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சாதனைக் குழந்தை விருது, 2022-ஆம் ஆண்டில் ஈரோடு மகாகவி பாரதியார் இலக்கியத் தமிழ்ப் பேரவை சார்பில் சுந்தரக்கவி விருது, "தமிழ் அறிவுக் களஞ்சியம்' சார்பில் தமிழ்ச்சுடர், சிறந்த குழந்தைப் பேச்சாளர் விருதுகள், 2021-ஆம் ஆண்டில் திருக்குறள் முற்றோதுதல் போட்டியில் வெற்றி பெற்று ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும் சான்றிதழ், லிங்கா சாதனையாளர் போன்ற பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளேன். சர்வதேச குழந்தைகள் புத்தகத் தினத்தை கொண்டாடும் விதமாக, " கற்க! நிற்க! என்ற புத்தகத்தை அண்மையில் வெளி யிட்டேன்.
தமிழ் மொழியின் ஆர்வம் குறித்து..?
தமிழ் நம்முடைய தாய் மொழியையும் தாண்டி, பொதுவான விஷயங்களை நமக்கு கற்றுக் கொடுக்கிறது. அதில், ஜாதி, மதங்களைக் கடந்து வரும் திருக்குறள் முதன்மையான இடத்தில் உள்ளது. திருக்குறள் மீது நான் வைத்திருந்த அன்புதான் தமிழின் மீது ஆர்வத்தையும், ஆசையையும் தூண்டியது.
நம்மை நாமே சில கேள்விகள் கேட்டாக வேண்டும். பிறந்ததற்கு அடையாளமாக இந்த உலகில் எதைவிட்டுச் செல்லப் போகிறோம். சோம்பல் சகதியில் வீழ்ந்து புலம்புவதா?, இல்லையெனில் வெற்றிச் சிகரத்தைத் தொட்டு மகிழ்வதா?, பள்ளி மாணவர்கள் வெற்றிச் சிகரத்தைத் தொட வேண்டும் என்றால் பெற்றோர் சொல்வதைக் கேட்க வேண்டும்.
நான் எழுதிய புத்தகத்தில் ஓர் சிறப்பு உள்ளது. திருக்குறள், பொருள் எல்லாமே கல்வி சார்ந்த கதைகள்தான் அதிகமாக இருக்கும். அதனால்தான் "கற்க! நிற்க' என்ற தலைப்பை புத்தகத்துக்கு வைத்துள்ளேன்.