காதல் குறித்த ஒரு உரையாடல்!

"காதலினால் மானிடர்க்குக் கவிதை யுண்டாம் கானமுண்டாம்..  சிற்பமுதற் கலைகளுண்டாம் ஆதலினால் காதல் செய்வீர்.. உலகத்தீரே...'!
காதல் குறித்த ஒரு உரையாடல்!

"காதலினால் மானிடர்க்குக் கவிதை யுண்டாம் கானமுண்டாம்.. சிற்பமுதற் கலைகளுண்டாம் ஆதலினால் காதல் செய்வீர்.. உலகத்தீரே...'! என்று காதல் செய்ய அழைத்தான் பாரதி. "ஒரு பெண்ணை காதலிப்பதென்றால், அவளைக் கல்லினுள்ளிருந்து உயிர்ப்பிப்பது என்று பொருள்.

அடி முதல் முடிவரை காதலால் நீவி சாபமேற்றுவது, உறைந்துபோன ரத்தத்தில் கனவுகளில் சூடேற்றுவது என்று பொருள்' என்று பரம்பொருளான காதலுக்கு அர்த்தம் சொன்னார் சச்சிதானந்தம். "நான் உன்னைக் காதலிப்பேன். மரணமற்ற காதலாகும் அது.

சூரியன் குளிர்ந்து போகும்வரை நட்சத்திரங்கள் முதுமையடையும்வரை நான் உன்னைக் காதலிப்பேன்' என்று எப்படிக் காதலிக்க வேண்டும் எனக் கற்றுத்தந்தார் ஷேக்ஸ்பியர். ஆம், காதலைப் பேசாத... காதலை எழுதாத...

காதலைக் கொண்டாடாத கவிஞர்கள் இல்லை; படைப்பாளிகள் இல்லை. காதலைக் கடக்காத... காதலுடன் கைகோக்காத மனிதர்களும் இல்லை... காதல்தான்... காதல் மட்டும்தான் அனைத்துக்கும் கிரியா ஊக்கி. எழுத்தா... ஓவியமா... புகைப்படமா... கவிதையா.. அறிவியல் கண்டுபிடிப்பா... அனைத்தும் ஈரமான காதலிலிருந்துதான் உயிர்ப்பித்தது... உயிர்ப்பிக்கிறது.'' எங்கேயோ தொடங்கி கதையின் கருப்பொருளை தேடி வந்து நிறுத்துகிறார் இயக்குநர் கீரா. "பச்சை என்கிற காத்து', "பற‘ என ஆழமான கதைகளை தொடக் கூடியவர். இப்போது இரும்பன் படத்தின் மூலம் வருகிறார்.

உள்ளடக்கம் புரிய வருகிறது.... விரிவாக பேசினால் இன்னும் கொஞ்சம் விளங்கும்....

நவீன வாழ்க்கை என்பது ஏராளமான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு வகையில் இந்த மாற்றங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பெண்கள் நிறைய படிக்கிறார்கள். வேலைக்கு செல்கிறார்கள். மாற்று சாதியைச் சேர்ந்த இளைஞர்களோடு பழகுகிற, நட்பு பாராட்டுகிற, காதலிக்கிற வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் நவீன வாழ்க்கை அளிக்கும் தொழில்நுட்ப முன்னேற்ற வசதிகளையும், வாய்ப்புகளையும் ஏற்றுக் கொள்கிற மனம், புறவிளைவான காதல் திருமணங்களை மட்டும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. உற்று நோக்கினால் இதுதான் பக்குவப்பட்ட சமூகமா என்ற கேள்வி எழுகிறது. தீவிரவாதத்தால் மாண்டவர்களைவிடக் காதலால், காதலின் பெயரால் இறந்தவர்கள்தான் அதிகம் என ஒரு புள்ளி விபரம் குருதி சொட்டச்சொட்டப் புலம்புகிறது.

கடந்த 15 ஆண்டுகளில், காதலால் மாண்டவர்களின் எண்ணிக்கை 38,585. இதே காலகட்டத்தில் தீவிரவாதச் செயல்களால் இறந்தவர்கள் 20,000. இதே வருடங்களில்தான் காதலுக்காக, காதலின் பெயரால் கடத்தப்பட்டவர்கள் 2.6 லட்சம் பேர். காதல் தற்கொலைகளில், மூழ்கித் தவிக்கும் முதன்மையான ஏழு மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்த 15 ஆண்டு காலகட்டத்தில் மட்டும் 9,405 தற்கொலைகள் தமிழகத்தில் அரங்கேறி இருக்கின்றன என்கிறது அந்தப் புள்ளிவிவரம். இந்த ரத்தக்கறையை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் பிறமாநிலங்கள் ஆந்திரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிஸ, அசாம். காதலும்தான் அவசியம் என இந்த மானிடர்கள் புரிந்துக் கொள்ளவேயில்லை. அதை இந்தக் கதையில் கடந்து போகிற சிலருக்கான அனுபவங்களும், துயரங்களும்தான் கதை.

சில அரசியல் சூழல்களையும் இங்கே பேச வேண்டிருக்குமே...

இல்லை இது அழகான காதல் கதை. காதலுக்கான போராட்டம் அவ்வளவுதான். எளிய மனிதனின் காதல். ஊடகங்களும், பொழுதுபோக்குகளும் மலிந்து விட்ட நாட்டில் தனி மனிதனுக்கான அரசியல் ஈர்ப்புகள் மழுங்கி விட்டன. எந்த அரசியலை தேர்ந்தெடுப்பது... எவர் பின்னே செல்வது... என்பதெல்லாம் இந்த தலைமுறைக்கு சாபம் போல் விதிக்கப்பட்டுள்ளன. இது நேர்மையான குற்ற உணர்ச்சி என யாரிடமும் சொல்வதற்கு இல்லை. சாதி பூதம் தமிழகம் முழுக்க காதலர்கள் மத்தியில் உண்டாக்கும் பேரச்சத்திலிருந்து, தங்களைக் காப்பாற்றக் கோரிக் கதறுகிறது காதல். இதுதான் இப்போதையை நிலை. இதை அப்படியே பதிவு செய்திருக்கிறேன். விவசாயம், கிராமம், தமிழர்களின் முகம், காதல், அனுபவங்கள்தான் படம். அன்பும் பரிவும்தான் மானுடத்தின் நிரந்தரம் என்பதை காட்சிகளின் வழியாக நின்று பேசியிருக்கிறேன். காதல்தான் இங்கே எல்லாவற்றுக்கும் ஆதாரம்.

நடிகர்களின் பங்களிப்பு...

ஜூனியர் எம்.ஜி.ஆர். இவர்தான் நம்ம ஹீரோ. எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்தில் வளர்ந்தவர். நேர்த்தியான சினிமாவுக்காக காத்திருந்தார். கைப்பிடித்து அழைத்து வந்திருக்கிறேன். ஹீரோயின் ஐஸ்வர்யா தத்தா. இந்த இரண்டு பேரும்தான் கதையின் ஆதாரம். யோகி பாபு, சென்ட்ராயன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய பங்களிப்பு தந்திருக்கிறார்கள். சென்னையில் ஆரம்பிக்கிற கதை அந்தமான் தீவுகள் வரை செல்கிறது. நடுக்கடலில் சில முக்கிய காட்சிகள் படமாகியிருக்கின்றன. கவிஞர் கண்ணதாசன் கூறியது போல் "தற்கால உலகம் காதலுக்கு லாயக்கற்றது' என்றாகிவிடும். அப்படி ஆகுமாயின், கலையும் படைப்பும் எந்த அழகும், ஒழுங்கும் இல்லாமல் சிதைந்துவிடும். சமூகத்தில் நல்லிணக்கம் இல்லாமல் ஆகிவிடும்... அமைதி சிதைந்துவிடும். அதற்காகவேணும்... காதல் குறித்த ஓர் உரையாடலை நிகழ்த்துவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com