திரைக்கதிர்

அஜித் படம் கைநழுவிப் போனாலும், அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறார் விக்னேஷ் சிவன். 
திரைக்கதிர்
Published on
Updated on
1 min read

அஜித் படம் கைநழுவிப் போனாலும், அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறார் விக்னேஷ் சிவன். 
'விக்கி லெவன்' என்கிற கிரிக்கெட்  டீமை ஆரம்பித்து, மாலை நேரங்களில் வியர்க்க விறுவிறுக்க விளையாடுகிறார். 'லவ் டுடே' பிரதீப் ரங்கநாதனை வைத்துப் படம் இயக்கும் முடிவும் தயாரிப்பாளர் தலையீட்டால் தள்ளிக்கொண்டே போவதால், குழந்தைகளோடும் கிரிக்கெட் டீமுடனும் பொழுதைக் கழிக்கிறார். 
அஜித்துக்காக பக்கா மாஸாகச் செய்த கதையை இந்தி, தெலுங்கு ஸ்டார்களிடம் சொல்லி, 'இப்படிப்பட்ட கதையைத்தான் அஜித் சார் மிஸ் பண்ணிட்டார்' என நிரூபிக்க நினைப்பது மட்டுமே விக்கியின் ஒரே டார்கெட்டாக இருக்கிறதாம்.


'வாரிசு',  'பொன்னியின் செல்வன் 2'  ஆகிய படங்களுக்குக் கிடைத்த வரவேற்பினால் மகிழ்ந்திருக்கிறார் நடிகர் சரத்குமார்.  சினிமாவில் தற்போது பரபரப்பாக இயங்கி வரும் சரத்குமாரிடம் 20-க்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன. அவரின் சினிமா வாழ்க்கையில் மைல் கல்லாக அமைந்த 'சூர்ய வம்சம்'  படத்தின் இரண்டாம் பாகத்துக்காக தயாராகி வருவது சிறப்புச் செய்தி. இதற்காக தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரியை சந்தித்தும் பேசியிருக்கிறார். 'கண் சிமிட்டும் நேரங்கள்' படத்தில் ஆரம்பித்து, இப்போது வரை 145 படங்கள் நடித்து விட்டேன். இப்போது 150-ஆவது படம் 'ஸ்மைல் மேன்' நடிக்கிறேன். மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி சினிமாக்களிலும் நடிக்கிறேன்'' என்கிறார் சரத்குமார். 

சன் பிக்சர்ஸ் நிறுவனம், ஒரே நேரத்தில் ஐந்து படங்களுக்கான அறிவிப்பை வெளியிடும் திட்டத்தில் இருக்கிறது. ரஜினி, தனுஷ், லோகேஷ் கனகராஜ் - அனிருத் ஆகியோரிடம் பேசி முடித்திருக்கும் நிறுவனம், அடுத்து சிவகார்த்திகேயனை வளைத்துப் போடும் முடிவில் இருக்கிறது.  பல ஆண்டுகளுக்கு முன்னரே சிவகார்த்திகேயனின் 'அயலான்' பட சாட்டிலைட் உரிமையை வாங்கியிருந்தது சன் நிறுவனம். படம் தாமதமானதால் பெரிய இழப்பு எனச் சொல்லி, சிவகார்த்திகேயனின் மனதை மசியவைத்து தேதி வாங்கியிருக்கிறதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம். 'அயலான்' இயக்குநர் ரவிக்குமாரே இந்தப் படத்தையும் இயக்கப்போவதாகச் சொல்கிறார்கள்.

தாய்லாந்துக்குச் சென்று சில மாதங்களாக தற்காப்புக் கலையைப் பயின்று வந்த சிம்பு, இப்போது தேசிங்கு பெரியசாமியின் படத்துக்காக ஹோம் ஒர்க்கில் இருக்கிறார். சமீபத்தில், தன் ரசிகர் மன்றத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்து, பிரியாணி விருந்து அளித்து மகிழ்ந்தார் சிம்பு.  அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு மாவட்ட ரசிகர்களையும் சந்திக்க தயார் ஆகி வருகிறார். சிம்புவின் இந்தத் திடீர் மாற்றம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X