பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்துக்கு தும்பல் கிராமத்தில் பழந்தமிழர்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் தொல் பழங்காலத்தின் வரலாற்றுச் சான்றான முதுமக்கள் ஈமத்தாழி கல்வட்டங்கள் இருப்பதை சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
'சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், கல்வராயன்மலை போன்ற பகுதி
களில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் நாகரிக வாழ்க்கை வாழ்ந்ததற்கு வரலாற்று தடயங்களாக நடு
கற்கள், கல்வெட்டுகள், சதிக்கல், கல்திட்டைகள் ஏராளமாகக் காணக் கிடக்கின்றன.
தற்போது தும்பல் கிராமத்தில் அரசினர் மேல்நிலைப் பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு கால்நடை மருத்துவமனை அமைந்துள்ள பகுதிகளில் மலைக்குன்று அடிவாரத்திலுள்ள விளைநிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்களில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள், இறந்துபோன முதியோர்களின் உடல்களை தடிமான சுடு மண் பானைகளில் வைத்து நிலத்தில் குழி தோண்டி புதைத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இறந்தவர்கள் உடல்களோடு அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் சேர்த்தும் புதைத்துள்ளனர். இந்த ஈமத்தாழி நினைவுச் சின்னங்களைச் சுற்றி வட்டவடிவில் கற்களைப் பதித்து கல்வட்டங்கள் அமைத்துள்ளனர்.
இந்த இடங்களில் கட்டடப் பணிகள், வாய்க்கால் அமைக்கப்பட்டதாலும் பல கல்வட்டங்கள், இருந்த சுவடுகளே இல்லாமல் மறைந்து போனது. ஆனால் இன்றளவும் தும்பல் கோட்டப்பட்டி பிரதான சாலையையொட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வடக்கு புறத்தில் தனியார் நிலத்தில் இன்றளவும் கல்வட்டங்கள் காணப்படுகின்றன.
கரியக்கோயில் ஆற்றங்கரையில் வாழ்ந்த மக்களின் தொல் பழங்கால வரலாற்றையும் அறிய முடிகிறது'' என்றனர்.
- பி.பெரியார்மன்னன்