தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

சினிமாவில் புதிய முயற்சி: குகன் சக்ரவர்த்தியாரின் கலைப்பயணம்
தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

ஒரு அருமையான படம் ரெடி சார். ஹீரோ, கதை, திரைக்கதை, இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவு என சினிமாவின் 21 கிராப்ட்களிலும் நானே வேலை பார்த்து உழைத்திருக்கிறேன்.

இப்போது வந்து ஒரே படத்தில் உச்சத்துக்கு போகிறவர்களுக்கும் எனக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. 30 வருடங்களுக்கு மேலாக நான் இந்த சினிமாவில்தான் இருக்கிறேன். நண்பர்களுக்காக சில படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், இப்போது வேறு மாதிரி, எல்லோரும் திரும்பி பார்க்கிற மாதிரி ஒரு முயற்சியில் வருகிறேன்.

இப்போதுள்ள சினிமாவில் இதெல்லாம் எடுபடுமா என்ற கேள்விக்கே இடமில்லை. அதை நடத்திக் காட்டத்தான் வந்திருக்கிறேன். இது தலைக்கனம் இல்லை.... தன்னம்பிக்கை இலக்கணம்.'' குகன் சக்ரவர்த்தியார் பேச பேச, எக்ஸ்பிரஸ் ரயில் எதிரே வருவதைப் போல் அதிர்கிறது அறை. டி.ஆர்.பாணியில் சினிமாவில் அத்தனை துறைகளிலும் உழைத்து இவர் உருவாக்கியிருக்கும் படம் "வங்களா விரிகுடா'.

எல்லாமும் மாறி வருகிற சூழலில், இத்தனை உழைப்பையும் ஒரே நபர்தான் செய்ய வேண்டுமா....

எந்தக் கலையும் காலத்துக்குத் தகுந்த மாதிரி தன்னை மாற்றிக் கொள்லும்; மாற வேண்டும். அப்படி மாற்றிக் கொள்ளாமல் இருக்கும் கலைகள் காலப்போக்கில் அழிந்து விடுகிறது. அதனால், இப்போது இருக்கிற சூழலுக்குத் தகுந்த மாதிரி நான் "சினிமா' வடிவத்தை மாற்றியிருக்கிறேன். நமக்கு தஞ்சாவூர்தான் பூர்வீகம். கிராமங்களில் தெருக்கூத்து நடக்கும்போது வீட்டில் இருந்து பாய் எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து விடிய விடிய பார்க்கிற வயதான ரசிகர்கள்தான் இப்போது வரைக்கும் இருக்கிறார்கள்.

இப்போது இருக்கிற தலைமுறையினர், பெரிய பட்ஜெட் சினிமாவே இரண்டரை மணி நேரத்துக்கு மேல போனது என்றால், போர் அடிக்கிறது என்று சொல்கிறார்கள். அவர்களின் ரசனைக்கு ஏற்ற மாதிரி சினிமாவை நான் அப்டேட் செய்திருக்கிறேன். அதற்கு பல நபர்களை துணைக்கு கொண்டு உழைக்கலாம். ஆனால், அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால்தான், நானே எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு களம் இறங்கி விட்டேன். காரணம், மக்களுக்கு நம் கலைகளைப் பற்றி முழுமையாக தெரியப்படுத்த வேண்டும்.

இந்தத் தலைமுறைக்கு நல்லக் கருத்தை கொண்டு சேர்க்க வேண்டும். வணிக சினிமாவைத் தாண்டி நல்லது செய்ய வேண்டும். இளம் தலைமுறைக்கு ஒரு வரலாற்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்கான முயற்சிதான் இது.

அப்படி என்னென்ன நல்ல விஷயங்களை கொண்டு வருகிறீர்கள்....

ஒருவரால் தான் வாழும் கடைசி நொடி வரை தர்மம் செய்ய முடியும், சொத்து சேர்க்க முடியும். ஆனால், இன்னொருவருக்குக் கல்வியறிவையும், வாழ்க்கையையும் கற்பித்துக் கொண்டே இருக்க முடியுமா என்றால் அது வெகு சிலரால் மட்டுமே முடியும்.

அப்படி ஒரு பெயர் இருக்குமென்றால் "அப்துல்கலாம்' என்ற பெயர் அதில் கட்டாயம் இருக்கும். ராமேசுவரத்தில் பிறந்த இவர் ராஷ்ட்ரபதிபவன் வரை சென்று கடைக்கோடி ஊரில் இருந்து முதல் குடிமகனாக மகுடம் சூடினார்.

அணு விஞ்ஞானி, அறிவியல் ஆசிரியர், குடியரசுத் தலைவர் எனப் பன்முகத் தன்மை கொண்ட அவரை அடுத்தடுத்த தலைமுறைகள் பின்பற்ற வேண்டும்.... இதுதான் இங்கே முக்கிய கருத்தாக இருக்கும். அதே சமயத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி என நம் அண்மைக் கால தலைவர்களின் நெறிகளும், வாழ்க்கையும் இதில் உண்டு. கூடவே, சமகாலப் பிரச்னைகள் இன்றைக்கு நடக்கிற விஷயங்களும் இருக்கும்.

அரசியல் விமர்சன படமா....

அரசியல் துளியும் இல்லை. நம் எண்ணங்கள்தான் வாழ்க்கை. ஒரு விஷயத்தில் எந்தளவுக்கு திட்டமிட்டு இருக்கிறோமோ, அது அந்தளவுக்கு கிடைத்தே தீரும் என்பதுதான் இதன் பொருள். ஒரு விஷயத்தை ஆழ்ந்து நோக்க வேண்டும் என்பதுதான் சிவனின் தத்துவம். அது மனித எண்ணங்களின் ரகசியம். அந்த ரகசியத்தை கொண்டு வந்திருக்கிறேன். எண்ணம் எதுவோ, அதுவே வாழ்க்கை. மூடி அடைக்கப்பட்டிருக்கும் சின்ன கூடாரத்தில் இருந்து ஒரு உலகமே வெளியே வருகிறது என்பதுதான் கருப் பொருள். அதிகாலையில் உதிக்கும் சூரியன் பிரகாசமாக எரிவதும், உச்சியில் தகிப்பதும், மாலையில் அடங்குவதுதான் இங்கே வாழ்க்கையின் தத்துவம். இது வாழ்க்கைக்கும் அடங்கும். அது தெரியாமல் இந்த சின்ன வாழ்க்கையில் ஆடுவதெல்லாம் அத்தனை ஆட்டம். இது

நம்பிக்கைகளோடு விளையாடும் கதை. கெட்ட விஷயங்களை விட்டொழிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டே, அதை பற்றி சிந்திப்போம். அந்த எண்ணம் சம்பவங்கள் நடப்பதற்கான சூழலை அமைக்கிறது. கடந்த காலத்தையும், இந்த நாளையும் இணைத்து பார்க்கும் முயற்சி இது.

அப்துல்காலம் வாழ்க்கை தொடங்கி சிவனின் தத்துவம் வரை.... எதுதான் கதையின் உள்ளடக்கம்....

இதில் சொல்ல வருகிற விஷயம் உலகத்துக்கானது. முழுக்க முழுக்க செயற்கையாகி விட்ட இந்த மனித வாழ்க்கையை உரசி பார்க்கும் ஒரு கதைக் களம் இது. அதனால் இந்தக் கதைக்கு மொழி தேவை இல்லை. யார் பார்த்தாலும் புரியும். இதை உலகம் முழுக்க கொண்டு சேர்க்கும் பொருளாதார பலம் என்னிடம் இல்லை.

வித்தியாசமாக ஏதாவது செய்தால், திரும்பி பார்க்க வைக்கலாம் என்ற யோசனை இருந்தது. அதற்காகத்தான் இந்த வித்தியாசமான முயற்சியில் இறங்கினேன். "127 ஹவர்ஸ்', "தி பரேட்', "காஸ்ட் அவே' படங்கள் சின்ன பட்ஜெட்டில் மிகக் குறைந்த நபர்களால் எடுக்கப்பட்ட படங்கள்தான். ஆனால், உலக அளவில் எல்லோருக்கும் போய் சேர்ந்தது. காரணம் அந்தப் படங்களின் மேக்கிங்தான். கதை சொல்லப்படுகிற விதத்த்தில் வித்தியாசம் காட்டியிருந்தார்கள். அப்படித்தான் நானும் வித்தியாசம் காட்ட விரும்பினேன். அதனால் இதை பெரும் சிரத்தையோடு செய்து முடித்திருக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com