வெற்றி, தோல்விகளைக் கடந்து சினிமாவில் பயணித்துக் கொண்டே இருப்பவர் ஜெய் ஆகாஷ். தயாரிப்பு, இயக்கம், நடிப்பு என பல்துறைகளிலும் கவனம் செலுத்தி வந்த இவர் இப்போது நடிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசும் போது....
""நல்ல சினிமா பற்றி நிறைய கனவுகள் உண்டு. கலைஞனின் கனவில் அவனுடைய பங்களிப்பு பாதிதான். ரசிகர்களின் ஒத்துழைப்பில்தான் நல்ல கனவுகள் நிறைவடையும். ஹீரோ, ஹீரோயின் என்பதைத் தாண்டி, கதை இருந்தால்தான் அந்த படத்துக்கு வெற்றி கை கூடும். இந்த மாற்றம்தான் சினிமாவுக்கு முக்கியமானது. ஹாலிவுட்டில் இது எப்போதோ வந்து விட்டது. இங்கே இப்போதுதான் நடந்துக் கொண்டு வருகிறது. பெரிய ஸ்டார், சின்ன ஸ்டார் என எந்த வித்தியாசத்தையும் ரசிகர்கள் பார்ப்பதில்லை. கதை இருந்தால் போதும்...
இந்த நிலை இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்தால், எல்லாமே மாறி விடும். எனக்கும் அப்படித்தான். கதைதான் முக்கியம். இதுதான் கதை என தீர்மானமாக பிடித்து விட்டால், அந்த கதையில் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று விடுவேன். ஓடுகிற படத்தில் இருப்பதை விட, கதை உள்ள படத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன்.
இந்த நிலைப்பாடு கடைசி வரை இருந்தால் அழகான வெற்றிகளின் பட்டியல் தொடரும். சமீபத்தில் வெளியான ஜெய் விஜயம் ஒடிடி தளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தயாரிப்பு, இயக்கம் என கூடுதல் சுமைகளை ஏற்காமல், நடிப்பில் மட்டுமே தனி கவனம் செலுத்த இருக்கிறேன்'' என்றார் ஜெய் ஆகாஷ்.